பச்சை குத்திக் கொள்வதில் மன்னன்!
படத்திலுள்ள, 34 வயதான, மேத்யூ வீலன் என்பவர், முன்னால் மற்போர் வீரர். இன்று, பிரிட்டனிலேயே, அதிக அளவில், பச்சை குத்திக் கொண்ட நபர் இவர் தான். இவருடைய உடலில், பச்சை குத்தாத இடமே இல்லை.இவருடைய அப்பாவும், மாமாவும் பச்சைக் குத்திக் கொள்வதைப் பார்த்த இவருக்கு, தன் ஒன்பதாவது வயதிலேயே, பச்சை குத்திக் கொள்ளும் ஆசை வந்துள்ளது. ஆனாலும், ௧௬ வயதில் தான், முதன் முதலில் பச்சைக் குத்திக் கொண்டார்.பொதுவாக, பாம்பு, தேள், கூர்ந்து பார்க்கும் கண்விழி, ரத்தம் குடிக்கும் வவ்வால் போன்ற உருவங்களையே, பச்சை குத்தி உள்ளார். இதற்காக, இவர் செலவு செய்த தொகை, 24 லட்ச ரூபாய். இவர், தன்னை 'இங்க் உலகின் மன்னன்' என்றும், 'நடமாடும் கேன்வாஸ் அருங்காட்சியகம்' என்றும் அழைத்துக் கொள்கிறார்.பார்த்ததையே திரும்ப திரும்ப பார்த்தால் போரடிக்குமே என்று, பச்சை குத்தியவற்றில் சிலவற்றை அழித்து, புதிதாக குத்திக் கொள்ளவும் தீர்மானித்தார். இதற்காக, தன் உடலில், பல பாகங்களிலிருந்து, பழைய உருவங்களை லேசர் மூலம் அழித்து விட்டார். இதற்கு ஆன செலவு, ஐந்து லட்ச ரூபாய். லேசர் சிகிச்சை செய்து கொண்ட இடங்கள் ஆறி, குணமானதும், புதிய உருவங்களை, பச்சைக் குத்திக் கொள்ள, முடிவு செய்து உள்ளார். சிலர், கிண்டலடித்தாலும், அதைப் பற்றி கவலைப்படுவதில்லை இவர்.பர்மிங்காம் நகரைச் சேர்ந்த இவர், தற்போது, அந்தப் பகுதியில், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் எம்.பி.,க்கு, உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.இறந்ததும், தன் உடலை, அருங்காட்சியகத்திற்கு அளித்து, நிரந்தர பார்வைக்கு, ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது, இவர் விருப்பம்.- ஜோல்னாபையன்.