உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்

சபாஷ்... நல்ல யோசனை!

என் தோழியின் கணவர், அலுவலகத்திற்கு செல்லும் போதெல்லாம், ஏதேனும் ஒரு காரணத்தை வைத்து வெளியே வருவாள் எதிர் வீட்டு பெண். வந்ததும், நைசாக தோழியின் கணவரை பார்ப்பாள்; அவரும் அந்த பெண்ணை பார்த்து, ஒரு வெட்டு வெட்டி விட்டு செல்லத் தவறுவதே இல்லை.மனதுக்குள் பொருமிய தோழி, விஷயத்தை என்னிடம் கூறினாள். நான் ஒரு யோசனை கூறினேன். அதன்படி, எதிர் வீட்டு பெண்ணின் கணவர், அலுவலகம் செல்லும் போதெல்லாம், வெளியே வந்து நிற்க ஆரம்பித்தாள் தோழி. ஆண் பிள்ளையாயிற்றே, சும்மா இருப்பாரா... 'சைட்' அடிக்க ஆரம்பித்து விட்டார் தோழியை. அவ்வளவுதான்! எதிர் வீட்டு பெண்ணை பார்ப்பதே அபூர்வமாகி விட்டது.'முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்' என்ற உபாயம் பலித்து விட்டது. இப்போது தோழியின் கணவரும், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார். பெண்களே... 'சைட்' அடிக்கும் கணவரை திருத்த, சண்டை போட வேண்டாம்; சமயோஜிதமாக சிந்தித்து, செயல் பட்டாலே போதும்!— ஆ.சுகாசினி, சென்னை.

விவஸ்தை இல்லாமல் விமர்சிக்கும் ஆசாமிகள்!

எனக்கு தெரிந்த ஒருவர், வாரியம் ஒன்றில் பொறுப்பான உத்தியோகத்தில் இருக்கிறார். அவருக்கு தெரிந்தவர்களை எங்காவது சந்திக்க நேர்ந்தால், நலம் விசாரிக்க மாட்டார். 'என்னய்யா... முன்னாடி துருத்திக்கிட்டிருந்த பல்லை, இன்னுமா டாக்டர்கிட்ட காட்டி பிடுங்காம இருக்கிற; ரொம்ப அசிங்கமா இருக்கு...' என்று, அவர் குறையை பலர் முன்னிலையில் விமர்சிப்பார். வந்தவர் முகமோ சுருங்கிப் போகும். இதே போல், வேறு ஒருவரை பார்த்து, 'என்னடா... உன் தலை மயிர் இப்படி நரைச்சு போச்சு! ஒரேயடியா சுண்ணாம்புத் தலையனாட்டம் ஆயிட்டியே...' என்பார்.மற்றொருவரின் வழுக்கை தலையை பார்த்து, 'என்னப்பா... இப்படி பூராவுமே கொட்டிப் போச்சு! ஹூம்... எண்ணெய் செலவு மிச்சம்...' என்று சொல்லி சிரிப்பார். வந்தவருக்கோ, 'இந்த ஆளை ஏன் சந்தித்தோம்' என்று ஆகிவிடும்.இவரது முரட்டு சுபாவத்தையும், அநாகரிக பேச்சையும் அறிந்த காரணத்தினால், அவரிடம் நேரிடையாக எதுவும் சொல்ல பயப்படுகின்றனர். இப்படி பலர் முன்னிலையில், கேலியும், கிண்டலுமாக பேசுவதால், அவர்களது மனம் எவ்வளவு வேதனைப்படும் என்பதை, இவரைப் போன்ற மரமண்டைகள் எப்போதுதான் உணர்வரோ!— வீ.கார்த்திக் ராஜா, மதுரை.

டாம்பீக கிறுக்குகள்!

சமீபத்தில், ஒரு மண விழாவுக்குச் சென்றிருந்தேன். அனைவரும், பட்டு வேட்டி - ஜிப்பாவும், பட்டுப் புடவையுமாய் குவிந்திருந்தனர். முகத்தில் அப்பிய, 'மேக்-அப்'பும், செயற்கை குசல விசாரிப்புகளுமாய் ஓடிக் கொண்டிருந்தது விழா.அப்போது, அழுக்கு வேட்டி, சட்டையுடன், கரிய நிறத்தில் ஒருவர் வந்தார்.உள்ளே நுழைந்ததும், 'நெடுநெடு'வென வளர்ந்திருந்த ஒருவரை நெருங்கி, வாய் நிறைய சிரிப்புடன், 'என்னப்பா... எப்படி இருக்கே... எப்ப ஊர்லேர்ந்து வந்தே...' என ஆர்வமாய் விசாரித்தார். இவரைப் பார்த்ததும், 'நெடுநெடு'வின் முகமே மாறிப் போனது. அவரை ஏற, இறங்கப் பார்த்து, 'ம்... ம்... நேத்து தான் வந்தேன்...' எனக் கூறி, மொபைல் போனில் பேசுவது போல் பாவனை காட்டி, நகர்ந்தது.இவர் அதைக் கண்டு கொள்ளாமல், அடுத்தவரை நெருங்கினார்... 'எனக்கு பக்கோடா உண்டாபா?' என, உரிமையுடன் அவரிடம் கேட்க, அவர், 'அங்கே இருக்கு... கேட்டு வாங்கிக்கோ...' என ஒருமையில் பேசி, அனுப்பி வைத்தார்.இவர் முகம், லேசாய் வாடியது. பொருட்படுத்தாமல், தட்டில் பக்கோடா வாங்கிக் கொண்டு, ஓரமாய் ஒதுங்கினார்.ஒரு நிமிடம் கூட ஆகவில்லை... ஒரு வயதான டாம்பீகம், இவர் அருகே வந்து, 'ஏம்பா... நீ போய்ட்டு அப்புறமா வாயேன்...' என்றது. இதைக் கேட்டதும், அவர் வாயில் இருந்த பக்கோடா, தொண்டையில் இறங்க மறுத்தது. 'கூப்பிட்டாங்க... வந்தேன்...' எனக் கூறியபடியே, தட்டை கீழே வைத்து விட்டு, நடையைக் கட்டினார்!இவர் யார் என்று விசாரித்த போது, இப்போது டாம்பீகமாய் நிற்கிறாரே, அவர், குடும்பத்தில் சொத்து பிரச்னை ஏற்பட்ட போது, பலரிடமும் பேசி, அனைவரும் ஏற்றுக் கொள்வது போன்ற ஒரு நல்ல தீர்வைச் சொன்ன, படிக்காத மேதை என்றனர். இந்த மேதை, இப்போது, அழுக்குச் சட்டையாம், ஆகாத ஜாதியாம் என்று கூறி, ஒதுக்க நினைத்ததை எண்ணி, மனம் வலிக்க, நானும் நடையைக் கட்டினேன்!— பா.மீனா, மாயவரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !