இது உங்கள் இடம்!
தங்கம், வெள்ளி, இரும்பு உலோகத்தால் ஆபத்து!சமீபத்தில், என் உறவினர் ஒருவர், உடல் நிலை சரியில்லாததால், நாட்டு மருத்துவரிடம் சென்றுள்ளார். ஒரு செம்புத் தவளையில், தலா ஒரு தங்க நாணயம், வெள்ளி நாணயம் மற்றும் இரும்பு ஆணியை போட்டு பாதியளவு தண்ணீர் ஊற்றி, நான்கு மணி நேரம் கொதிக்க விட்டு, ஆறியபின், அந்நீரை வடிகட்டி தினமும் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நாட்டு மருத்துவர் கூறியுள்ளார். என் உறவினரும் அவ்வாறே ஒரு வாரம் குடித்துள்ளார்.அச்சமயம், அவருடைய அலோபதி டாக்டர் நண்பர், அவரை பார்க்க வந்துள்ளார். அவரிடம், நாட்டு வைத்தியர் கூறியபடி, தண்ணீர் குடித்து வருவதாக கூறியுள்ளார் உறவினர். அதைக் கேட்டதும், அதிர்ந்து போன டாக்டர், 'எந்த உலோகத்தையும், கொதிக்க வைத்து நேரிடையாக குடித்தால், கிட்னி பாதிக்கும்...' என்று கூறியுள்ளார்.அதைக்கேட்டதும், பயந்து போன உறவினர், அவ்வாறு குடிப்பதை நிறுத்தி, முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார். 'ஒரு வாரம் குடித்ததால் பாதிப்பு இல்லை; தொடர்ந்து குடித்திருந்தால், நிச்சயம் கிட்னி பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்யும்படி ஆகியிருக்கும்...' என்று கூறியுள்ளார் டாக்டர்.வாசகர்களே... யார் எதைச் சொன்னாலும், அலோபதி டாக்டரிடம் கலந்து ஆலோசித்த பின்பே செய்யுங்கள்!— வ.சந்திரா, மதுரை.வயதுக்கு வந்த பெண்ணுக்கு...சில வாரங்களுக்கு முன், என் தோழியின் மகள் வயதுக்கு வந்திருந்ததால், அவளைக் காண சென்றிருந்தேன். அப்போது, தன் மகளிடம் பேசிக் கொண்டிருந்த தோழி, என்னை வரவேற்று அமர செய்தவள், தொடர்ந்து மகளிடம் பேச ஆரம்பித்தாள்... 'மாதவிலக்கு ஏற்படுவது இயற்கையான நிகழ்வு. இதைக் கண்டு பயமோ, கலவரமோ, அருவருப்போ பட தேவையில்ல. 'அந்த' சமயங்களில் உடலையும், கைகளையும் சுத்தமாக, வைத்துக் கொள்ள வேண்டும்...' என்று கூறியவள், பள்ளியில் இருக்கும் போது பீரியட்ஸ் வந்து விட்டால், எப்படி நடந்து கொள்ள வேண்டும், நாப்கினை பையன்கள் கண்ணில் படாதவாறு, எப்படி பாத்ரூம் எடுத்துச் சென்று, எப்படி அணிய வேண்டும். பின், எப்படி அதை, 'டிஸ்போஸ்' செய்வது என்று விளக்கினாள்.அதன்பின் என்னிடம் பேசியவள், 'பெரும்பாலான அம்மாக்கள், இம்மாதிரியான முக்கியமான விஷயங்களில், சரியான அறிவுரை வழங்குவதில்லை. இதனால், தேவையில்லாமல் பெண் குழந்தை பயந்து விடுகின்றனர்...' என்றாள்.என் தோழியின் செயலை பாராட்டி விட்டு வந்தேன்.— கே.தீபிகா, சென்னை.வண்டி ஓட்டுபவரிடம் பேச்சை தவிர்க்கலாமே!என் அலுவலக அதிகாரி ஒருவர், தொலைபேசி அல்லது கைபேசியில் பேச ஆரம்பிக்கும் முன், 'டிரைவிங்கில் இருக்கீங்களா... பேசலாமா...' என்று கேட்ட பின் தான் பேசுவார். இதுகுறித்து ஒருமுறை அவரிடம் கேட்ட போது, 'நாம தொடர்பு கொள்ளும் நபர், ஒரு வேளை வாகனத்தில் சென்று கொண்டிருக்கலாம்; சிக்னலுக்கு, 'வெயிட்' செய்திருக்கலாம். அந்நேரத்தில் நாம் பேசுவது அவருக்கு இடையூறாக இருக்கும். அதைத் தவிர்க்கவே, முதலிலேயே இவ்வாறு கேட்டு விடுகிறேன்...' என்றார்.இதை எல்லாருமே பின்பற்றலாமே!— என்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை.