உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

பெற்றோரே... பிள்ளைகளை நம்புங்கள்!சமீபத்தில், ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை குடும்பத்துடன் அமர்ந்து, 'டிவி' பார்த்துக் கொண்டிருந்த போது, என் மகளைத் தேடி வந்தனர், ஒரு தம்பதி. என் மகளை அழைத்த அப்பெண், 'எங்கடி என் பொண்ணு?' என்று கோபமாக கேட்டாள். 'அவ இங்க வரலையே ஆன்டி...' என்று என் மகள் சொன்னதும், 'என்னடி விளையாடுறியா... என் பொண்ணை, எவனோடு அனுப்பி வச்ச... காலையில போனவ இன்னும் வீட்டுக்கு வரல; உங்கூடத்தான் சினிமாவுக்கு போறதா சொன்னா... அவ, எங்க இருக்கான்னு சொல்லு...' என்று கத்தினாள்.இதனால், கோபமான நான், 'காலையிலிருந்து என் பொண்ணு வீட்ல தான் இருக்கா; அவ எங்கேயும் வெளியே போகல. உங்க பொண்ணு எங்க போனாளோ அங்கே போய் தேடுங்க...' என்று சத்தம் போட்டதும், கண்ணீரோடு கிளம்பிப் போனவள், எங்கள் தெருவிலுள்ள அவள் மகளின் வகுப்பு தோழியரின் வீட்டிலும் தேடிய பின், அவள் வீட்டுக்கு திரும்பியுள்ளாள்.வீட்டில் மகள் இருக்கவே, 'எங்கே போனாய்...' என்று கேட்டுள்ளாள். என் மகளின் பெயருடைய வேறொரு தோழியுடன் சினிமாவுக்கு போனதாக கூறியுள்ளாள். இதை புரிந்து கொள்ளாமல், மகளை சந்தேகப்பட்டதுடன் அல்லாமல், அவள் யாருடனோ சென்று விட்டாள் எனக் கூறி, தன் மகளையே அசிங்கப்படுத்தி விட்டாள், அப்பெண்.பெற்றோரே... முதலில் உங்கள் பிள்ளைகளை நம்புங்கள். பெண் பிள்ளைகள் விஷயத்தில், அவசரப்பட்டு தவறான முடிவு எடுக்காதீர்கள்!— எஸ்.தட்சிணாமூர்த்தி, தஞ்சாவூர்.தேவை அலாரம்; கேமரா அல்ல!சமீபத்தில், என் நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, வீட்டின் பின்புற கதவை, யாரோ திறந்து மூடியதும், 'கிணு கிணு...' என்ற அலார ஒலி கேட்டது. இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, 'இதன் பெயர், 'பர்க்ளர்' அலாரம். அமெரிக்காவில் உள்ள என் மகன் வீட்டிற்கு சென்றிருந்த போது, அங்கு எல்லா வீடுகளிலும் இந்த அலாரத்தை பொருத்தி இருந்தனர். இக்காலகட்டத்திற்கு இது ரொம்ப அவசியம்.'இப்போது எங்கு பார்த்தாலும் வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன. கொள்ளையர்களின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது. கேமரா பொருத்தி என்ன பயன்? புகைப்படத்தை வைத்து, போலீசார் திருடர்களை கண்டுபிடிப்பதற்குள், அவர்கள் வேறு மாநிலத்துக்கு ஓடி விடுவர் அல்லது நகைகளை விற்றோ, அடகு வைத்தோ விடுவர்.'வீட்டைச் சுற்றி, மின்சார வேலியும் அமைக்க முடியாது; காரணம், யாராவது அதில் சிக்கி, ஏதேனும் ஆகிவிட்டால், நம் கதி அதோகதி தான்.'இதை தவிர்க்க, 'பர்க்ளர்' அலாரத்தில் இரு விதமான, 'மெனு'க்கள் இருக்கின்றன. தீ விபத்து ஏற்படும் போதும், திருடர்கள் கதவை திறந்தோ, ஜன்னலை உடைத்தோ, உள்ளே வரும் போதும், அலாரம் உச்ச ஸ்தாயியில் ஒலித்து, திருடர்களை விரட்டி விடுகிறது.'கம்பெனியின் அலுவலகத்திலும் அலார சத்தம் உடனடியாக பதிவாகும். இதன் மூலம் அவர்கள், போலீசுக்கு தகவல் தருவர். அலாரம் இருப்பது, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிவதாலும், அடிக்கடி சோதனை செய்வதாலும், திருடர்கள் நம் வீட்டுக்கு வர யோசிப்பர். மேலும், திருடர்கள் வெளியில் தெரியும், 'ஸ்பீக்கரை' அல்லது 'ஒயர்'களை சிதைத்தாலும், உடனே, கம்பெனிக்காரர்களுக்கு எச்சரிக்கை சென்று விடும்...' என்று விளக்கினார்.திருட்டை தவிர்க்க, அலாரம் பொருத்துதல் நல்லது தானே!— ஏ.ஸ்ரீவாஸ், சென்னை.பிரசவத்திற்கு கால் டாக்சி இலவசம்!எங்கள் பகுதியில் ஓடும் கால்டாக்சி ஒன்றில், 'பிரசவத்திற்கு இலவசம்' என்று, எழுதியிருந்தது. முன்பு, ஆட்டோக்களில் தான் இப்படி எழுதி இருப்பர். அதனால், கால் டாக்சி உரிமையாளரிடம் கேட்ட போது, 'பெரும்பாலான ஏழை கர்ப்பிணி பெண்கள் ஆட்டோவில் தான் பயணம் செய்கின்றனர்; ஆட்டோக்களோ சாலையில் குலுங்கி குலுங்கி செல்கிறது. டாக்சி என்றால் குலுங்காமல் செல்லும். கர்ப்பிணி பெண்களுக்கு, இது, சவுகரியமாக இருக்கும்.'தினமும், ஒரு கர்ப்பிணி பெண்ணையாவது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன். ஏதோ என்னால் ஆன உதவி...' என்றார்.அவரின் நல்ல உள்ளத்தை வாழ்த்தினேன். இதுபோல, மற்ற கால் டாக்சி உரிமையாளர்களும், உதவ முன் வரலாமே!— யோ.ஜெயந்தி, குனியமுத்தூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !