இது உங்கள் இடம்!
மாணவியரே ஏன் இப்படி?வெளி மாவட்டத்தை சேர்ந்த நண்பர் ஒருவரின் மகள், சென்னை மத்திய பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, ஐ.டி., கம்பெனியில், வேலை பார்த்து வருகிறாள். சென்ற வாரம் நண்பரை சந்தித்த போது, வேறு ஹாஸ்டல் பார்க்க சொன்னார்.விவரம் கேட்ட போது, உடம்பெல்லாம் வெலவெலத்து போனது. நண்பரின் மகள், வேலை முடிந்த களைப்பில் தூங்கலாம் என்றிருக்கும் போது, (ஒரு அறையில் குறைந்தது, ஆறு பேர்; இதில், நான்கு பள்ளி மாணவிகள். நான்கில், இரண்டு பேர் உள்ளூரில் வீடு இருந்தும், விடுதியில் தங்கி படிக்கின்றனர்!) மாணவிகள் மடி கணினியை ஆன் செய்து, ஆண் நண்பர்களுடன் சாட்டிங் செய்கின்றனர். அவர்களிடமிருந்து, 'பென் டிரைவ்'வை வாங்கி வந்து, 'அந்த' மாதிரி படங்களை பார்த்து, மொபைல் போனில், ஆண் நண்பர்களுக்கு அங்குலம், அங்குலமாக இவர்கள் விளக்கமும் சொல்கின்றனராம்! என்ன கொடுமை இது? இன்றைய மாணவியர் எங்கே செல்கின்றனர். விடுதியில் தங்கி படிக்கும் மாணவியரின் பெற்றோரே உஷார். — ஆ.நடராஜன், சென்னை.மானம் காக்கும் மிளகாய் பொடி, ட்ரீட்மென்ட்!என்னுடன், பத்தாம் வகுப்புப் படிக்கும் தோழி, தன் பையில் மிளகாய் பொடி வைத்திருந்ததைப் பார்த்து, 'எதற்கு?' என்று கேட்டேன். 'இப்போதெல்லாம் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவி களை பாலியல் தொந்தரவு செய்கின்றனர். அப்படி யாரும் உன்னிடம் நடந்து கொண்டால், அமைதியாக இருந்து விடாமல், பயப்படாமல், இந்த மிளகாய் பொடியை முகத்தில் தூவி, முதலில் உன்னை காத்துக் கொள். பிறகு, மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி, என் அம்மாதான் இந்த மிளகாய் பொடியைக் கொடுத்தாங்க...' என்று சொன்னாள் அந்த தோழி. இன்றைய ஆசிரியர்கள், ஆ'சிறியர்'களாய் இருக்கும் போது, அந்தத் தாயின் மிளகாய் பொடி பார்முலா சரி என்றே பட்டது எனக்கு. நானும் ஒரு பாக்கெட் மிளகாய் பொடி வைத்துக் கொள்ள துவங்கி விட்டேன்.— ரா.தேன்மொழி, கீரமங்கலம்.பொது மக்களின் நண்பனா?என் நண்பரின் ஏரியாவில், விடியற்காலை, 2:30 மணி அளவில், ஒரு திருடன் ஓட்டைப் பிரித்து, வீட்டிற்குள் இறங்கிய போது, கையும், களவுமாக பிடிபட்டான். திருடன் பிடிபட்டவுடன், பொதுமக்கள் லேசாக புடைத்தனர். அதற்குள், சிலர் போலீசுக்கு போன் செய்யவே, போலீசார் வந்தனர். போலீஸ் வந்தவுடன், 'யாருப்பா போன் செய்தது?' என்று கேட்க, சுற்றியிருந்த கூட்டம் சற்றே பின்வாங்கியது. அடுத்து, 'யாருய்யா திருடனை அடித்தது?' என்று கேட்க, கூட்டம் எகிறி ஓட ஆரம்பித்து, கலைந்தே விட்டது. என் நண்பன் மட்டும், போலீசை நெருங்கி, 'அகப்பட்ட திருடனைப் பிடித்துச் சென்று, கேஸ் போடுங்க சார்...' என்றார். உடனே போலீஸ், 'உங்களுக்கு யாருய்யா அடிக்கிறதுக்கு அதிகாரம் கொடுத்தது? மரியாதையா திருடனை கூட்டிட்டு போய், முதலுதவி சிகிச்சை அளித்து, ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வாங்க...' என்று மிரட்டினார். வாக்குவாதம் முற்ற, திருடன் விட்டான் ஓட்டம்; அவ்வளவுதான் பிரச்னை ஓவர். அனைவரும், அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டனர். திருடனை பிடித்து, போலீசிடம் ஒப்படைத்த பிறகும், போலீஸ் ஏன் இப்படி பொது மக்களை மிரட்டுகிறது? 'போலீஸ் பொது மக்களின் நண்பன்...' என்ற வார்த்தைக்கு உயிர் உள்ளதா? — ஆர்.ஹரிஹரன், கோவை.