அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள சகோதரி —நான், 52 வயது பெண். கணவர் - பிசினஸ் மேன். வயது: 57. எங்களுக்கு, இரு மகள்கள், இரு மகன்கள். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன்கள் இருவரும், வெளிநாட்டில் படிக்கின்றனர். என்னுடைய, 20வது வயதில் திருமணமானது. கணவர், அவரது பெற்றோருக்கு ஒரே மகன். புகுந்த வீட்டில், அப்போது பெரிதாக வசதி ஏதும் இல்லை. கணவர், தன் அப்பாவின் பிசினசில் ஈடுபட்டிருந்த ஆரம்ப காலக்கட்டம் அது.வீட்டு வேலைகள் அனைத்தையும், நான் தான் செய்ய வேண்டும். அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்ததால், அவர்களை கவனித்து, வீட்டு வேலைகள் செய்வது சிரமமாக இருந்தது. இதற்கிடையில், பிசினஸ் விஷயமாக வெளிநாட்டிற்கு சென்றார், கணவர். வீட்டு பராமரிப்பு, குழந்தைகள் வளர்ப்பு என, நானும் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் இருந்தேன்.பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன், மாமனார் இறந்துவிட்டார். பிசினசில் நிறைய சம்பாதிக்க ஆரம்பித்தார், கணவர். வீடு, கார் என வசதிகள் பெருகின.சென்னையில், புதிதாக பெரிய பங்களா கட்டினார். இரு மகள்களுக்கு விமரிசையாக திருமணம் செய்து வைத்தார். மகன்களை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பினார். வெளிநாட்டில் இருந்தபடியே, அவ்வப்போது இந்தியா வந்து, தன் கடமைகளை செய்து வந்தார், கணவர். ஐந்து ஆண்டுகளுக்கு முன், என் மாமியார் இறந்து விட்டார். தனிமையில் நான் மட்டும் அவ்வளவு பெரிய வீட்டில் இருந்தேன். வெளிநாட்டிலிருந்து திரும்பி, கடந்த இரண்டு ஆண்டுகளாக, என்னுடன் நிரந்தரமாக தங்கியுள்ளார், கணவர். இங்கு வந்த பிறகும், என்னுடன் அன்பாக ஒரு வார்த்தை பேச மாட்டார். அவர் உண்டு, அவர் பிசினஸ் உண்டு என இருப்பார். மாலை நேரத்தில், பிசினஸ் நண்பர்களுடன் சேர்ந்து, மது அருந்துவது வழக்கம். கடந்த, 25 ஆண்டுகளாக பிரிந்திருந்தது, எனக்கு தான் வலி மிகுந்த காலங்கள். அவரது அருகாமைக்கு ஏங்கி, பல நாட்கள் தவித்துள்ளேன். இங்கு வந்த பிறகும், ஏதோ அன்னியர் போல் நடந்து கொள்வது, அவர் மீது வெறுப்பு தான் வருகிறது. வெளிநாட்டில் தேவைப்பட்ட போது, பல பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டதாக என்னிடமே கூறுவார். நானும், தனிமையில் தவித்த போது, வேறு ஒருவருடன் சென்றிருந்தால், இவர் அதை ஒப்புக் கொள்வாரா என, மனதளவில் கேட்டுக் கொண்டேன். இப்போதெல்லாம், மன உளைச்சல் காரணமாக, எல்லாரிடமும் எரிந்து விழுகிறேன். என் கணவர் சம்பந்தப்பட்ட டிரஸ், வாட்ச் என்று எதைப் பார்த்தலும் கிழித்தும், உடைத்தும் என் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கிறேன். இதிலிருந்து விடுபடுவது எப்படி சகோதரி.— இப்படிக்கு, உங்கள் சகோதரி.அன்பு சகோதரிக்கு —உங்கள் முதலிரவிலேயே உன்னை, ஆணாதிக்க கண்களால் ஸ்கேன் பண்ணி பார்த்திருப்பார், கணவர்.'இவள், நமக்கு காலமெல்லாம் சம்பளம் இல்லாத வேலைக்காரியாய் ஊழியம் செய்வாளா அல்லது வலுக்கட்டாயமாக சம உரிமைகளை தட்டி பறிப்பாளா?' என.தாம்பத்ய அடிமையாய் வைத்திருந்து, நான்கு குழந்தைகளை பெற்று விட்டார். வீட்டு வேலைகளைச் செய்யும் கொத்தடிமையும் ஆக்கிவிட்டார். தளர்ந்து போன உனக்கு உணவிடுவதும், பராமரிப்பதும் அவர் உனக்கு செய்யும் பெரிய சலுகையாக உணர்கிறார்.உனக்கு, 'மாரல் சப்போர்ட்' ஆக இருந்த மாமனாரும், மாமியாரும் இறந்து விட்டனர். இருமகள்களுக்கும் திருமணமாகி விட்டது. கல்வி கற்கும் மகன்கள், வெளிநாட்டில்.இப்போது உன் கணவருக்கு வயது 57. வேட்டையாடிய சிங்கம், சற்றே முதுமை அடைந்து விட்டது. யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரத்தானே செய்யும்? வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என, ஒரு பழமொழி உள்ளது, உனக்கு தெரியுமா?மெதுமெதுவாக வீட்டு அதிகாரங்களை, 'டேக்ஓவர்' செய். நகைச்சுவையாய் பேசும் பாவனையில், அவரது கடந்த கால செயல்களை குத்திக்காட்டு. அவரது பலவீனங்களை, அறியாமைகளை பட்டியலிடு.'இத்தனை பின்னடைவுகள் இருந்தவன், பிசினஸில் எப்படிய்யா ஜெயிச்ச...'- என, நக்கல் செய். இரு மகன்களுடன் மொபைல் போனில் பேசி பேசி, தந்தையின் சுயரூபத்தை வெளிப்படுத்து. உன், மகள்களுக்கு செய்த கடமையில், 5 சதவீதமாவது எனக்கு செய்தாயா? என்னை முற்றிலும் புறக்கணித்த உனக்கு, எண்ணெய் கொப்பரை நரகம் தான் என, திகிலுாட்டு.இது ஒரு மனோதத்துவ போர். தொடர்ந்து உன் கணவரின் பலவீன பக்கங்களை தாக்கினால், மனிதர் துவண்டு போவார்.இப்படியெல்லாம் பேச, உனக்கு யாராவது சொல்லித் தருகின்றனரா என, சந்தேகிப்பார்.ஆண்களை விட சகலவிதங்களிலும் கெட்டிக்காரர்கள், பெண்கள். வங்கி கணக்குகளை கூட்டுக்கணக்காக்கு. பணத்தை உன் விருப்பத்துக்கு செலவழி. வீட்டிலிருக்கும் போதை பானங்களை உடைத்து நொறுக்கு. கணவரின் போதை பான நண்பர்களை, 'எலிமினேட்' பண்ணு.— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.