இது உங்கள் இடம்!
இளம் தம்பதியின் முயற்சி!என் நெருங்கிய தோழியின் மகள், கல்லுாரியில் தன்னுடன் படித்தவனை காதலித்தாள். இருவரும் படித்து முடித்து வேலைக்கு செல்லும் வரை, காதலைத் தொடர்ந்தனர்.இதுபற்றி அறிந்த இரு குடும்பத்தினரும், அவர்களது திருமணத்துக்கு சம்மதித்தனர்.தங்களுக்கு ஆடம்பரத் திருமணம் வேண்டாம் என்றும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ, பதிவுத் திருமணமே போதும் என்றும் கூறி விட்டனர், மணமக்கள்.இருவரது பெற்றோரும் பதிவுத் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டு, எளிமையாக திருமணத்தை நடத்தி வைத்தனர்.இதனால், இரு பெற்றோரும் திருமண செலவுக்காக வைத்திருந்த பணத்தை இவர்களிடம் கொடுக்க, அப்பணத்துடன் தங்கள் சேமிப்பிலிருந்த தொகையையும் முதலீடாகப் போட்டு, சிறிய உணவகத்தை துவங்கினர். இப்போது, அந்த உணவகம் வளர்ச்சி அடைந்து, கணிசமான வருமானத்தை தருகிறது.திருமண செலவை மிச்சப்படுத்தி, தொழில் துவங்கிய அந்த இளம் தம்பதியின் முயற்சி, அனைவராலும் பெரிதும் பாராட்டப்படுகிறது.எதிர்காலத்தை நினைத்து, ஆடம்பரத்தை தவிர்த்து, தொழிலில் முதலீடு செய்த அவர்களின் முடிவு, இன்றைய இளம் தம்பதிகளுக்கு சிறந்த முன்மாதிரியாக இருக்கும் தானே!- வீ.குமாரி, சென்னை. மனைவிக்கு உடல் நல குறைவா?தன் மனைவி மீது மிகுந்த அன்பு கொண்டவர், என் உறவினர்.சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, 'டயாலிசிஸ்' மற்றும் மருந்துகளால் உடல் மெலிந்து, சிரிப்பையே மறந்து போன, தன் மனைவியை எண்ணி, மனம் வருந்தினார், உறவினர். அவளை எப்படியாவது மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று எண்ணியவர், அதற்கான முயற்சியை மேற்கொண்டார்.உடல் நல குறைபாட்டை எண்ணி, வீட்டிலேயே முடங்கி இருப்பதை விட, உறவினர்கள், நண்பர்களோடு பேசி சிரித்தால், மனநிலை மாறி, உடல்நிலையும் மேம்படும் என்று நம்பினார். அதற்காக மனைவியிடம் உற்சாகமாக பேசி, விசேஷங்களுக்கும், கோவில்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் அழைத்து செல்லத் தொடங்கினார்.அவர் மனைவியை பரிவுடன் கவனித்து வந்ததால், மனவலிமை பெற்று, இப்போது, உடல் நலமும் தேறியுள்ளார்.கணவன்மார்களே... மனைவி நோயில் இருக்கும்போது, அவளைப் புறக்கணிக்காமல் பொறுப்புடன் நடந்து கொள்வதால் நோய் பாதிப்பிலிருந்து விரைவாக குணமடையவும், குடும்பமும் தழைத்து மகிழ்ச்சி நிலைக்கவும் உதவும் ஒரே வழி!டி.லிங்கேஷ் குமார், விழுப்புரம்.கிராம இளைஞர்களின் சமூக பொறுப்புணர்வு!அண்மையில், என் நண்பரை சந்திக்க கிராமத்துக்கு சென்றிருந்தேன். அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த படித்த இளைஞர்களின் முயற்சியை பற்றி, கூறினார்...அவ்வூர் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து, 'நீர் பாதுகாப்பு இயக்கம்' என்ற பெயரில், தன்னார்வக் குழு ஒன்றை அமைத்து, அதன் மூலம் கிராமத்தில் உள்ள குளம் மற்றும் ஏரிகளில் துார்வாருதல், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தையும் அறிமுகப்படுத்தி, செயல்படுத்தியுள்ளனர்.அதோடு, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தி, நீரை வீணாக்காமல், சிக்கனமாக பயன்படுத்தும் முறைகளை கற்பிக்கின்றனர். மேலும், கிராமத்தில் உள்ள வீடுகளில் குடிநீர் குழாய்களை சரிபார்த்து, தண்ணீர் கசிவுகளை சரி செய்யும் பணியையும் மேற்கொள்கின்றனர். இதனால், கிராமத்தில் தண்ணீர் வீணாகாமல் நீர் பற்றாக்குறை குறைந்துள்ளது.இளைஞர்களின் இந்த தன்னலமற்ற முயற்சி, ஊர் மக்களிடையே வரவேற்பை பெற்றதோடு, இயற்கை வளங்களை பாதுகாக்கும் இத்தகைய முன்மாதிரி செயல்கள், மற்ற கிராமங்களுக்கும் பரவியுள்ளது.இதை நண்பர் கூறக் கேட்ட போது, நீரைப் பாதுகாப்பது உயிரைப் பாதுகாப்பது போன்றது. சமூகப் பொறுப்புணர்வோடு செயல்பட்டு வரும் அவ்வூர் இளைஞர்களை, மனதாரப் பாராட்டினேன்.— ஆர்.செந்தில்குமார், மதுரை.