"இயற்கை சீற்றத்தை சமாளிக்க பயிர்க்காப்பீடு அவசியம்
மனிதனின் உயிர்பாதுகாப்புக்கு 'லைப்' இன்சூரன்ஸ் போல, பயிர் பாதுகாப்புக்கும் திட்டம் உள்ளது. இந்தியாவில் 2003 வரை பொது காப்பீட்டுக் கழகம் பயிர் காப்பீட்டை அமல்படுத்தியது. அதன்பின் தேசிய வேளாண்மை காப்பீட்டு திட்டம் என்ற அரசு நிறுவனம் செயல்படுத்துகிறது. தற்போது மத்திய அரசுடன் இணைந்து, தமிழக விவசாய துறை தமிழகத்தில் காப்பீடு திட்டங்களை அமல்படுத்துகிறது.தமிழக விவசாயிகளில் 18 முதல் 20 சதவீதம் பேர்தான் பயிர்காப்பீடு செய்துள்ளனர். சிலர் காப்பீடு என்பது வீண்செலவு என கருதுகின்றனர். சில இடங்களில் இயற்கை சீற்ற ஆபத்து குறைவு தான். இதுவே காப்பீடு குறைய காரணமாக உள்ளது. ஆனால் எந்த நேரம் என்ன நடக்கும் என சொல்ல முடியாது. புயல், வெள்ளம்போல இயற்கை சீற்றத்துடன் பூச்சி, நோய் தாக்குதலும் ஏற்படலாம் அல் லவா? எனவே காப்பீடு அவசியம் என்பதை உணர வேண்டும்.இன்சூரன்ஸ் கமிட்டியில் விவசாய, காப்பீடு துறை அதிகாரிகள் உள்ளனர். யூனியன் அளவில் விவசாயம் குறித்த விபரங்களை வேளாண்மை உதவி இயக்குனர்கள் சேகரித்துள்ளனர். இதில் மண்வளம், பயிர்வளம், நிலத்தின் தன்மை போன்றவை அடிப்படையில் பயிர்காப்பீடு செய்யப்படும். மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கப்பட்ட வட்டாரங்களில் பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படும். தமிழகத்தில் 30 மாவட்டங்களில் 822 குறுவட்டங்கள் அறிவிக்கப் பட்டவையாக உள்ளன. நெல், சோளம், கம்பு, ராகி, மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சை பயறு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பருத்தி, உருளைக் கிழங்கு, வெங்காயம், மஞ்சள், வாழை, மரவள்ளிக் கிழங்கு, இஞ்சி, அன்னாசி போன்றவற்றிற்கு காப்பீடு வசதி உண்டு. இவற்றிற்கு வருவாய் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும். ஒரு ஏக்கரில் பயிர்செய்யப்பட்ட வாழையால் கிடைக்கும் லாபம், முதலீட்டு தொகை அளவை பொறுத்து இழப்பீடு கிடைக்கும். இயற்கை சீற்றம், பூச்சித்தாக்குதல், நோய் போன்ற காரணங்களால் நஷ்டம் ஏற்படும்போது இழப்பீட்டை பெறலாம்.நிலப்பரப்பு, பயிர்வகை, தட்பவெப்ப நிலையை பொறுத்து விவசாயிகள் செலுத்தும் தொகை மாறுபடலாம். ஒரு பயிரை விதைத்த பின் அறுவடை செய்ய ஓராண்டு ஆகும் என்றால், அக்காலம் முழுமைக்கும் காப்பீடு செய்ய வேண்டும். தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு தொகை அதிகம். ஏனெனில் அவை செலவு மிகுந்தவை என்பதே காரணம். ஒரு விவசாயி வங்கியில் கடன் பெற்று, ஒரு ஏக்கர் நிலத்தில் வாழைத் தோட்டம் அமைத்தால், ஒரு முறை காப்பீடு தொகையாக ரூ. 19 ஆயிரத்து 603 செலுத்த வேண்டும். கடன்பெறாத விவசாயி ரூ. 17 ஆயிரத்து 642 செலுத்த வேண்டும். வங்கிக் கடன் பெறுவோர் கட்டாயம் காப்பீடு செய்ய வேண்டும்.காப்பீடு செய்ய விரும்புவோர் நிலங்களின் பட்டா, சிட்டா அட்டை, அடங்கல் போன்ற ஆவணங்களை ஒரு தேசிய வங்கி, வணி கவங்கி, மண்டல கிராம வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொடுத்து காப்பீடு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு விவசாயத்துறையின் மாவட்ட இணைஇயக்குனர்கள், யூனியன் அளவில் உதவி இயக்குனர்கள் மற்றும் உதவி அலுவலர்களை அணுகலாம்.