எலுமிச்சை சொறி நோய்
எலுமிச்சை மரங்களைத் தாக்கும் நோய்களில் மிகவும் முக்கியமானது சொறி நோயாகும். இந்நோய் எலுமிச்சை பயிரிடப்படும் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படும் இந்நோய் ஒருவித பாக்டீரியாவினால் ஏற்படுகின்றது.நோயின் அறிகுறிகள்: இலை, கிளை, சிறுகிளைகள், முள், காய் மற்றும் பழங்களிலும் சொறிப் புள்ளிகள் தோன்றும். * குச்சிகளில் தோன்றும் சொறிப்புள்ளிகளால் குச்சிகள் காய்ந்துவிடும். * காய்களில் தோன்றும் சொறிப் புள்ளிகளைச் சுற்றிலும் மஞ்சள் நிற வளையம் தோன்றும். *பழங்களில் தோன்றும் சொறிப் புள்ளிகளில் வெடிப்புகள் தோன்றும். * நோயினால் பழங்களின் தோல்பகுதி பாதிப்பிற்கு உள்ளாகின்றன.* பழங்களில் சாறின் அளவும் குறைகின்றது. * சொறி நோயுற்ற பழங்களின் சந்தை மதிப்பு வெகுவாகக் குறைகின்றது. * பழத்திலுள்ள சொறிப்புள்ளிகள் மற்றும் வெடிப்புகள் மற்ற அழுகல் நுண்ணுயிர்கள் உட்புக வழி உண்டாக்குகின்றன. * சொறி நோயினை ஏற்படுத்தும் பாக்டீரியா, இலைத்துளைகள் மூலமாகவோ அல்லது பூச்சி அல்லது முட்களினால் ஏற்படும் காயங்கள் மூலமாகவோ உட்புகுந்து தாக்குதலை துவங்குகின்றது. * நோய் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு மழைத்துளிகள், காற்று மற்றும் இலை துளைக்கும் பூச்சிகள் மூலம் பரவுகின்றது.கட்டுப்படுத்தும் நுட்பங்கள்: * நோயுற்றுக் கீழே உதிர்ந்து கிடக்கும் இலைகளையும், சிறு குச்சிகளையும் சேகரித்து எரித்துவிட வேண்டும். * மரங்கள் சிறப்பாக வளர நன்கு பரிந்துரைக்கப்பட்ட அளவு உரமிட்டு முறையாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். * பழத்தோட்டங்களில் நோயுற்ற மரங்களிலிருந்து நோயுற்ற சிறு குச்சிகளை வெட்டி தீயிட்டு அழிக்கவும். பின் கவாத்து செய்த உடன் 0.30 சதம் தாமிர ஆக்சிகுளோரைடு மருந்து தெளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து மூன்று முறை ஸ்ட்ரெப்டோசைக்ளின் 100 பி.பி.எம். (100 மில்லி கிராம்/ 1லிட்டர் தண்ணீர்) மற்றும் 0.30 சதம் தாமிர ஆக்சிகுளோரைடு கலந்து ஒரு மாத இடைவெளியில் தெளிக்க வேண்டும். * மரம் துளிர்விடும் ஒவ்வொரு சமயமும் மரத்தின் அனைத்து பகுதிகளும் நன்றாக நனையுமாறு சூடோமோனாஸ் புளூரசன்ஸ் 0.2 சத கரைசல் (2 கிராம்/1லிட்டர் தண்ணீர்) தெளித்தல் அவசியம். * இவ்வகை பாக்டீரியா நோயைக் கட்டுப்படுத்த சூடோமோனாஸ் புளூரசன்ஸ் 0.2 சத கரைசல் (2 கிராம்/1 லிட்டர் தண்ணீர்) தெளிக்கவும். 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும். * எலுமிச்சையில் தோன்றும் இலைத்துளைப்பான்கள் இந்நோயைப் பரப்புவதால் அவற்றை பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்துக் கட்டுப்படுத்துவது அவசியம். * வேப்பம் புண்ணாக்கு (5 விழுக்காடு) கரைசலைத் தெளித்தும் இந்நோயினை பரப்பும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம்.முனைவர் மா.சூரியசந்திரசெல்வன், முனைவர் மூ.சாந்தி, முனைவர் ப.அமலாபாலு, ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.