உள்ளூர் செய்திகள்

குறுகிய கால மகசூலுக்கு இளஞ்சிவப்பு முள்ளங்கி

சவுடு மண் நிலத்தில், இளஞ்சிவப்பு முள்ளங்கி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், காவாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சு.ரமேஷ் கூறியதாவது: மணல் கலந்த களி மண் நிலத்தில், கீரை, வேர்க்கடலை, காய்கறி, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்துள்ளேன். இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைப்பொருட்களை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், ஆற்றங்கரையையொட்டி, சவுடு மண் நிலத்தில், நாட்டு ரகத்தைச் சேர்ந்த இளஞ்சிவப்பு முள்ளங்கி சாகுபடி செய்துள்ளேன். இந்த இளஞ்சிவப்பு முள்ளங்கி செடிகள் செழுமையாக வளர்கின்றன. இளஞ்சிவப்பு முள்ளங்கி, கீரையுடன் ஒன்றரை அடி உயரத்திற்கு வளரும் தன்மை உடையது.இளஞ்சிவப்பு முள்ளங்கியில் அதிக மருத்துவ குணம் நிறைந்திருப்பதால், சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயக்கம் காட்டுவதில்லை. வெள்ளை முள்ளங்கி, கீரையுடன் இரண்டு அடி உயரத்திற்கு வளரும் தன்மை உடையது. 60 நாட்களில் வெள்ளை முள்ளங்கி மகசூலுக்கு வருகிறது. ஆனால், 45 நாட்களிலேயே இளஞ்சிவப்பு முள்ளங்கி மகசூலுக்கு வருகிறது. குறுகிய காலத்திலேயே வருவாய் ஈட்டக்கூடிய காய்கறி சாகுபடியில் ஒன்றாக திகழ்கிறது. மேட்டுப்பாத்தி முறையில் சாகுபடி செய்தால், மழைக்காலத்திலும் சாகுபடி செய்யலாம். ஆண்டு முழுதும் வருவாய்க்கு வழி வகுக்கும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: சு.ரமேஷ், 81109 44475.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !