சென்னை: சட்டசபை நேரத்தை வீணடிக்கும் தந்திரத்தில் த.வெ.க., ஈடுபடுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழக செயலர் சண்முகம் தெரிவித்தார். சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: த.வெ.க., தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்க, சென்னையில் இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ., பங்கேற்காது; அதே நேரத்தில், த.வெ.க., ஆட்சிக்கு வெளியில் இருந்து கொடுக்கப்படும் ஆதரவு தொடரும். சண்டை மன்றமாக, சத்த மன்றமாக, சட்டசபையின் நேரம் வீணாவதை கண்டிக்கிறோம். காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு கூட, முதல்வர் விஜய் பதில் சொல்லவில்லை. நினைத்ததை எல்லாம் பேசுவதற்கு, சட்டசபை இடமில்லை. மூன்று 'பைல்'கள், தன் மேஜையில் இருப்பதாக சொன்ன முதல்வர், அவற்றை அப்படியே மூட்டை கட்டிவிட்டார். சர்க்காரியா கமிஷன் குறித்து பேசுவது, சட்டசபை நேரத்தை வீணடிக்கும் தந்திரம். த.வெ.க., அமைச்சர்கள் முதலில் படிக்க வேண்டும். 'மிசா'வில் கைதான வர்கள் எல்லாம் சமூக விரோதிகள் என, அமைச்சர் நிர்மல்குமார் கூறியது சிறுபிள்ளைத்தனம். வரலாறு தெரியாமல், தி.மு.க., மீதான கோபத்தில், சகட்டுமேனிக்கு எல்லார் மீதும் சேற்றை வாரி இறைக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், 'மிசா' எனப்படும் அவசர நிலை காலத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், காவல் துறையால் கடுமையாக தாக்கப்பட்டு, அவரது தாடை உடைக்கப்பட்டது. 'அதை உருவ கேலி செய்யும் விதமாக பேசுவது கண்டனத்திற்குரியது. முதல்வரே அதை செய்திருப்பது பொறுப்பற்ற செயல்' என தெரிவித்து உள்ளார். - சண்முகம் தமிழக செயலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
உருவ கேலி செய்வது
பொறுப்பற்ற செயல்
'மிசா' எனப்படும் அவசர நிலை காலத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், காவல் துறையால் கடுமையாக தாக்கப்பட்டு, அவரது தாடை உடைக்கப்பட்டது. அதை உருவ கேலி செய்யும் விதமாக பேசுவது கண்டனத்திற்குரியது. முதல்வரே அதை செய்திருப்பது பொறுப்பற்ற செயல். மக்கள் நலனுக்கு எள்ளளவுக்கும் உதவாத தனிமனித தாக்குதலுக்கான இடமாக சட்ட சபையை மாற்றுவது, அறமற்ற செயல். - சண்முகம் தமிழக செயலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்