சிவகுமார் முதல்வராவார் பசவராஜ் நம்பிக்கை
தாவணகெரே : ''இந்தாண்டு டிசம்பருக்குள் சிவகுமார் முதல்வராக பதவியேற்பார்,'' என, சென்னகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்கா திட்டவட்டமாக கூறினார்.கர்நாடகாவில் ஏற்கனவே முதல்வர் பதவி பிரச்னையால் காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் முதல்வர் பதவியை எதிர்பார்க்கின்றனர்.சமீபத்தில் புதுடில்லி சென்ற முதல்வர் சித்தராமையா, கட்சி மேலிடத் தலைவர்களை சந்தித்து மாநில அரசியல் குறித்து விவாதித்திருந்தார்.இந்நிலையில், தாவணகெரே நகரில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்கா அளித்த பேட்டி:இந்தாண்டு டிசம்பருக்குள் சிவகுமார் முதல்வராவது உறுதி. டிசம்பரில் முதல்வர் நாற்காலி காலியாகவில்லை என்றால், என்னிடம் கேளுங்கள். தற்போதைக்கு மாநிலத் தலைவர் பதவி காலியாக இல்லை. இப்பதவிக்கு தகுதியானவரை கட்சி மேலிடம் நியமிக்கும். மாயகொண்டா எம்.எல்.ஏ., பசவந்தப்பா கூட தலைவராகலாம்.பா.ஜ.,வுக்குள் தற்போது பல பிரச்னைகள் உள்ளன. முதலில் அவர்கள் அதை கவனித்து கொள்ளட்டும். சரக்கு சேவை வரியில், மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய நிதியை முதலில் மத்திய அரசிடம் கேட்டு பெற்றுத்தரட்டும். தங்களால் ஆட்சியை பிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.