| ADDED : செப் 08, 2026 03:55 AM
பாகல்கோட்: சொத்துகளை சமமாக பகிர்ந்தளிக்கும்படி வேண்டி, தந்தையின் உடலை தாலுகா அலுவலகம் முன் வைத்து, பிள்ளைகள் போராட்டம் நடத்தினர். பாகல்கோட் மாவட்டம், ஜமகன்டி தாலுகாவின் அவடி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா வாகென்னவரா, 76. இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவிக்கு ஒரு மகனும், இரண்டாவது மனைவிக்கு ஐந்து மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். எல்லப்பா வாகென்னவராவுக்கு, வீடு, நிலம் போன்ற சொத்துகள் உள்ளன. இதில் இரண்டாவது மனைவியின் இரண்டு மகன்கள் 2.15 ஏக்கர் நிலத்தை, யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக விற்றுள்ளனர். இது மற்ற பிள்ளைகளுக்கு தெரிந்து கோபம் அடைந்தனர். தங்களுக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என தகராறு செய்தனர். இந்நிலையில் வயது முதிர்வால் உடல் நிலை பாதிப்படைந்த எல்லப்பா வாகென்னவரா, நேற்று காலையில் காலமானார். அவருக்கு இறுதி சடங்கு செய்ய, பிள்ளைகள் சம்மதிக்கவில்லை. முதல் மனைவியின் ஒரு மகனும், இரண்டாவது மனைவியின் மூன்று மகன்களும் தந்தையின் உடலை, ஜமகன்டி தாலுகா அலுவலகம் முன் வைத்து, போராட்டம் நடத்தினர். தந்தையின் சொத்துகளை சமமாக பகிர்ந்தளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஏற்கனவே சகோதரர்கள் சொத்துகள் விற்றதை ரத்து செய்ய வேண்டும் என, பிடிவாதம் பிடித்தனர். போராட்டம் நடத்தியவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பினர்.