பீதர் காங்கிரசில் கோஷ்டி மோதல் ஈஸ்வர் கன்ட்ரேக்கு வலுக்கும் எதிர்ப்பு
பீதர்: பீதர் காங்கிரசில் கோஷ்டி மோதல் ஆரம்பித்துள்ளது. வன அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே மீது, கட்சி மேலிடத்திடம் புகார் அளிக்க எதிர்தரப்பு தயாராகி வருகிறது.கர்நாடகாவில் 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், பீதர் மாவட்டத்தில் உள்ள பால்கி, பீதர் ஆகிய தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மற்ற நான்கையும் பா.ஜ., வென்றது.பால்கி எம்.எல்.ஏ., ஈஸ்வர் கன்ட்ரே வன அமைச்சராகவும், பீதர் எம்.எல்.ஏ., ரஹீம்கான் நகராட்சி நிர்வாக அமைச்சராகவும் உள்ளனர். பீதர் காங்கிரஸ் எம்.பி.,யாக ஈஸ்வர் கன்ட்ரே மகன் சாகர் கன்ட்ரே உள்ளார்.இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜசேகர் பாட்டீலுக்கும், ஈஸ்வர் கன்ட்ரேக்கும் இடையே தற்போது உரசல் ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறி உள்ளது.பெங்களூரில் தனியார் ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு ஈஸ்வர் கன்ட்ரேக்கு எதிராக ராஜசேகர் பாட்டீல் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.சி., அரவிந்த் அரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ராஜசேகர் பாட்டீல் பேசியதாவது:லோக்சபா தேர்தலில் நாம் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்து, சாகர் கன்ட்ரேயை எம்.பி., ஆக்கினோம். ஆனால் தற்போது பீதரில் பா.ஜ.,வுடன் சமரச அரசியல் நடக்கிறது. கட்சி தொண்டர்களால் வேலை செய்ய முடியவில்லை.கூட்டுறவு சங்க தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட உமாகாந்த் நாகமர்பள்ளி, என் உறவினர் என்றாலும், காங்கிரஸ் வேட்பாளர் அமர் கன்ட்ரே வெற்றிக்காக பிரசாரம் செய்தோம்.தற்போது எங்களை கன்ட்ரே குடும்பத்தினர் புறக்கணிக்கின்றனர். யாரும் பதவியில் நிரந்தரமாக இருக்க முடியாது. அதிகாரம் எந்த நேரத்திலும் பறிபோகலாம்.ஈஸ்வர் கன்ட்ரே மீது, கட்சி மேலிட தலைவர்களிடம் புகார் செய்ய உள்ளோம். மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல்கள் வருகிறது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து சென்றால் மட்டுமே வெற்றி பெற முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.