உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பரஸ்பரம் ஒப்புதலுடன் உடலுறவு குற்றமல்ல என ஐகோர்ட் தீர்ப்பு

பரஸ்பரம் ஒப்புதலுடன் உடலுறவு குற்றமல்ல என ஐகோர்ட் தீர்ப்பு

பெங்களூரு: 'பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவில் ஈடுபடுவது, தண்டனைக்குரிய குற்றமல்ல' எனக்கூறி, இளைஞர் மீது தொடரப்பட்ட பலாத்கார வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெங்களூரு நகரைச் சேர்ந்த சாம்ப்ராஸ் அந்தோணி, 23, என்பவருக்கு, 'டேட்டிங்' செயலி மூலம் ஒரு இளம்பெண்ணுடன் அறிமுகம் கிடைத்தது. ஓராண்டாக நட்புடன் பழகினர். 2024 ஆக., 8ம் தேதி இருவரும் நேரில் சந்திப்பது என்று முடிவு செய்தனர். அன்றைய தினம் காலையில் பல இடங்களுக்கு சென்றவர்கள், இரவு உணவு சாப்பிட்ட பின், தனியார் ஹோட்டலில் தங்கினர். அங்கு இருவரும் உடலுறவில் ஈடுபட்டனர். பின், இளம்பெண்ணை அவர் வசிக்கும் பகுதியில் விடுவதற்கு சாம்ப்ராஸ் அந்தோணி சென்றபோது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. கோபமடைந்த அப்பெண், மறுநாள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். பின், கோனனகுண்டே போலீசில், 'சாம்ப்ராஸ் அந்தோணி, தன்னை பலாத்காரம் செய்துவிட்டார்' என்று புகார் அளித்தார். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து, அவரை கைது செய்தனர். விசாரணை நீதிமன்றத்தில், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சாம்ப்ராஸ் அந்தோணி மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை, நேற்று நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அளித்த தீர்ப்பு: டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இருவரும், வாட்ஸாப், இன்ஸ்ட்ராகிராமில் அடிக்கடி அரட்டை அடித்துக் கொண்டுள்ளனர். இருவரும் ஒன்றாக புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். இதன் மூலம் புகார்தாரரின் குற்றச்சாட்டு பொய் என்பது நிரூபணமாகிறது. பரஸ்பரம் இருவரின் விருப்பத்தில், உடலுறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமல்ல. மனுதாரர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை