ஹனி டிராப் ஈனத்தனமான செயல் அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஆவேசம்
பெங்களூரு: மாநில தொழிற்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:அரசியல் ரீதியில் தலைவர்களை ஒழிக்க, 'பிளாக்மெயில்' செய்ய 'ஹனிடிராப்' மோசடி வலையை பயன்படுத்துவது, ஈனத்தனமான செயல். இதனால் மாநிலத்துக்கு அவப்பெயர் ஏற்படும். உச்ச நீதிமன்றத்திலும் இந்த வழக்கு தள்ளுபடியாகியுள்ளது.'ஹனிடிராப்' விஷயமாக, அமைச்சர் ராஜண்ணா புகார் அளிக்க தயங்குவது, அவரது தனிப்பட்ட விஷயமாகும். இதுகுறித்து உள்துறை அமைச்சர் முடிவு செய்வார்.அமைச்சரவை விஸ்தரிப்பு குறித்து, ஆலோசனை நடத்த முதல்வர் சித்தராமையாவுக்கு டில்லியில் இருந்து அழைப்பு வந்திருப்பது குறித்து, எனக்கு தகவல் தெரியாது. முதல்வர் கூறினால், அவரிடம் தகவல் தெரிந்து கொள்ளுங்கள்.துணை முதல்வர் சிவகுமார், அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய முற்படுவதாக, பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இதற்கு முன்பு முன்னாள் எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே, அரசியல் சாசனம் மாற்றப்படும் என கூறினாரே, அதை பற்றி பா.ஜ.,வினர் பேசட்டும்.அப்போது அவர்கள் போராட்டம் நடத்தவில்லையே ஏன்? அரசியல் சாசன திருத்தம் குறித்து, பேசவில்லை என, சிவகுமார் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.