மேலும் செய்திகள்
சித்திரை மாத அமாவாசை; தங்க கவசத்தில் ஆஞ்சநேயர்
28-Apr-2025
கொப்பால்: ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டி வரும், அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் கோவிலில், பூஜை செய்ய அர்ச்சகரே இல்லாதது, பக்தர்களுக்கு வருத்தம் அளித்துள்ளது.கொப்பால் மாவட்டம், கங்காவதி தாலுகாவின், ஹனுமனஹள்ளியில் அஞ்சனாத்ரி மலை அமைந்துள்ளது. இங்கு ஆஞ்சநேயர் பிறந்ததாக ஐதீகம். மலையில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில், ஆஞ்சநேயருக்கு பூஜைகள் செய்ய அர்ச்சகர் இல்லை. பக்தர்கள் வரும் போது, கோவிலின் பாதுகாப்பு ஊழியரே, பூஜை செய்து, பிரசாதம் கொடுக்கிறார்.சமீபத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மகன் அமர்நாத் வந்த போதும், பாதுகாப்பு ஊழியர், ஆஞ்சநேயருக்கு மங்களாரத்தி செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. வரலாற்று சிறப்பு மிக்க அஞ்சனாத்ரி கோவிலில் அர்ச்சகரை நியமிக்காத, கோவில் நிர்வாகத்தினரை, பக்தர்கள் கண்டித்துள்ளனர்.அஞ்சனாத்ரி மலை, ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட புண்ணிய பூமியாகும். ஆஞ்சநேயர் பிறந்த தலம். இந்த மலை இயற்கை வளம் கொண்ட சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் விளங்குகிறது. பெருமளவில் பக்தர்கள் குவிகின்றனர்.வாழ்வில் ஒரு முறையாவது அஞ்சனாத்ரி மலைக்கு வந்து, ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும் என, பக்தர்கள் காத்திருக்கின்றனர். 575 படிகளில் ஏறி மலை உச்சியில் உள்ள கடவுளை தரிசிக்கின்றனர். இப்படிப்பட்ட கோவிலில் சம்பிரதாயப்படி மந்திரங்கள் ஓதி, பூஜிக்க அர்ச்சகரை நியமிக்காமல், பாதுகாப்பு ஊழியரை வைத்து பூஜை செய்ய வைப்பது, பக்தர்களுக்கு வருத்தம் அளித்துள்ளது.'உடனடியாக அர்ச்சகரை நியமிக்க வேண்டும்' என, பலரும் வலியுறுத்துகின்றனர்.
28-Apr-2025