உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சீதையின் பாத்திரம் புனிதமானது முதல்வர் சிவகுமார் பாராட்டு

 சீதையின் பாத்திரம் புனிதமானது முதல்வர் சிவகுமார் பாராட்டு

பெங்களூரு: ''பெண்களின் சக்தி மற்றும் தியாகங்களை நான் பாராட்டுகிறேன். ராமாயணத்தில் ராமனை விட, சீதையின் கதாபாத்திரமே புனிதமானது,'' என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். பெங்களூரில் மகளிர் தொழிலதிபர்கள் கூட்டமைப்பு சார்பில், நேற்று நடந்த சர்வதேச மகளிர் மாநாட்டை, முதல்வர் சிவகுமார் குத்து விளக்கு ஏற்றி, துவக்கி வைத்து பேசியதாவது: பெண்கள் சமையல் அறை மற்றும் குடும்ப நிர்வகிப்பில் மட்டுமே, முடங்கி விடக்கூடாது. இந்த நாட்டின் வளர்ச்சியில், பெண்கள், இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். பெண் தொழிலதிபர்களுக்கு வங்கி கடன் அழுத்தம், பல்வேறு சரக்குகளை விநியோகித்தவர்களுக்கு பாக்கி வைத்திருப்பது என, பல விதமான பிரச்னைகள் இருக்கும். இவற்றை சமாளிப்பது பெரும் சவாலாக இருக்கும். இன்றைய மாநாட்டில், 70க்கும் மேற்பட்ட நிறுவனங்களின், 3,000க்கும் அதிகமான பெண் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இது வெறும் மாநாடு அல்ல. ஆயிரக்கணக்கான கனவுகளின் மேடை. பெண்களிடம் அபாரமான திறமை உள்ளது. ஒரு பெண் தாயாக, மனைவியாக, மகளாக, ஆசிரியையாக பல பொறுப்புகளை நிர்வகிக்கிறார். நமது சம்பிரதாயத்தில், பெண்ணுக்கு மகத்துவம் உள்ளது. புராணத்தில் சீதை, ராமனை விட அதிகமான திறன் உள்ளவராக இருந்தார். இது பற்றி பகிரங்கமாக விவாதிக்க, நான் தயாராக இருக்கிறேன். விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக, கவுரி பண்டிகை வருகிறது. பெண்களின் சக்தியை உணர்ந்தே, கிரஹலட்சுமி, சக்தி போன்ற திட்டங்களை செயல்படுத்தினோம். வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்திய போது, பிரதமர் உட்பட பா.ஜ.,வினர் விமர்சித்தனர். ஆனால் அந்த திட்டங்கள் இன்று கர்நாடகாவில் பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவுகின்றன. பெண்களின் வளர்ச்சியில் எங்கள் அரசு ஆர்வம் காட்டுகிறது. என்ன பிரச்னைகள் இருந்தாலும், வெளிப்படையாக விவாதிக்க வாய்ப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்