குரங்குகள் கடித்து மூவர் காயம்
கலபுரகி: தண்டோதி கிராமத்தில் குரங்கு தாக்கியதில் மூவர் காயமடைந்தனர். குரங்குகளின் தொந்தரவை கட்டுப்படுத்தும்படி, கிராம மக்கள் மன்றாடுகின்றனர். கலபுரகி மாவட்டம், சித்தாபுரா தாலுகாவின், தண்டோதி கிராமத்தில் சமீப நாட்களாக, குரங்குகளின் தொந்தரவு அதிகரித்துள்ளது. வனப்பகுதிகளில் இருந்து, ஊருக்குள் வருகின்றன. சாலையில் நடந்து செல்வோரை பாய்ந்து தாக்குகின்றன. சிறார்களை விளையாட வெளியே விடவும் மக்கள் அஞ்சுகின்றனர். பொதுவாக ஊர்களில், தெரு நாய்களின் தொந்தரவு அதிகம் இருக்கும். ஆனால் தண்டோதி கிராமத்தில் குரங்குகள், மக்களை அச்சுறுத்துகின்றன. நேற்று காலை, சாலையில் நடந்து சென்ற நீலம்மா, அப்பு பிரகாஷ், முகமது பாரூக் ஆகியோரை, குரங்குகள் கடித்தன. அவர்களின் கை, கால்களில் பலத்த காயமடைந்து, மருத்துவனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர். தொந்தரவு தரும் குரங்குகளை பிடிக்கும்படி, வனத்துறையினரிடம் கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.