| ADDED : டிச 01, 2025 06:10 AM
பீதர்: பீதர் வழியாக மஹாராஷ்டிராவுக்கு சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 6.60 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து, பீதர் எஸ்.பி., பிரதீப் குன்டி, நேற்று அளித்த பேட்டி: பீதர் மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக்க முயற்சிக்கிறோம். எந்த காரணத்தை கொண்டும், போதைப்பொருட்களை கடத்தவோ, விற்கவோ விட மாட்டோம். இச்செயலில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுப்போம். பீதரின் ராஜேஷ்வரா கிராமத்தின் அருகில் நேற்று முன்தினம் இரவு சரக்கு வாகனத்தில் ஆந்திராவில் இருந்து, கஞ்சா கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. பீதர் நகர போலீசார், அங்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாகனத்தில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 660 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 6.60 கோடி ரூபாய். இரண்டு கிலோ வீதம் பாக்கெட்டுகளாக்கி, மூடையில் வைத்திருந்தனர். ராஜ்குமார் ஹூகாரா, 35, இவரது சகோதரர் சஞ்சுகுமார் ஹூகாரா, 32, கைது செய்யப்பட்டனர். இவர்கள் பீதரின் மகதாளா கிராமத்தை சேர்ந்தவர்கள். ஒடிஷாவில் இருந்து, கடத்தி வரப்பட்ட கஞ்சா, ஆந்திரா, ஹைதராபாத் வழியாக ராஜேஷ்வரா மூலமாக மஹாராஷ்டிரா கொண்டு செல்லப்பட்டது, விசாரணையில் தெரிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.