புதுடில்லி: இந்தியர்கள் வீட்டில் சமைப்பது குறைந்துள்ளதாகவும்; உணவகங்கள் மற்றும் உணவு டெலிவரி சேவைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றில் செலவு செய்வது, கடந்த 10 ஆண்டுகளில், 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரீட்டிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் அதிக வருவாய் கொண்ட மக்கள், கடந்த 2023ம் நிதியாண்டில், தங்கள் மாதாந்திர உணவு பட்ஜெட்டில், கிட்டத்தட்ட 50 சதவீதத்தை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், உணவகங்கள் மற்றும் உணவு வினியோக சேவைகள் ஆகியவற்றில் செலவு செய்துள்ளனர்.பத்து ஆண்டுகளுக்கு முன் இதற்கான செலவு என்பது, 41.2 சதவீதமாக இருந்தது. இதேபோல், நடுத்தர வருவாய் கொண்ட மக்கள் இதற்கு செலவு செய்வதும், 16 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.பதப்படுத்தப்பட்ட உணவுகள் வாங்குவதும், வெளியே உண்பதும் அதிகரித்துள்ள நிலையில், வீட்டில் சமைப்பது கணிசமாக குறைந்துள்ளது. உணவு வினியோக சேவைகள் மற்றும் வணிக செயலிகள் அதிகரிப்பு, வருவாய் அதிகரிப்பு மற்றும் மாறும் உணவு விருப்பங்கள் ஆகியவற்றின் காரணமாக, இந்த போக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பருப்பு, முட்டை, மீன் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு செலவழிப்பது குறைந்துள்ளது. இது, அதிக வருவாய் ஈட்டுபவர்கள், தங்கள் வீட்டில் சமைப்பதை தவிர்த்து வருவதையே காட்டுவதாகவும், அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.அதிக வருவாய் உடையவர்கள் வீட்டில் சமைப்பதை தவிர்க்கின்றனர். பருப்பு, முட்டை, மீன் உள்ளிட்டவற்றுக்கு செலவழிப்பது குறைந்துள்ளது. நடுத்தர வருவாய் மக்கள் வெளி உணவுக்கு செலவு செய்வது, 16 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயர் வருவாய் உடையவர்கள் செலவு, 41.2 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.