தமிழகத்தில் ரூ.2,666 கோடி முதலீடு அமெரிக்க நிறுவனங்கள் ஒப்பந்தம்
சென்னை:'ஜாபில்' மற்றும் 'ராக்வெல் ஆட்டோமேஷன்' நிறுவனங்கள், திருச்சி மற்றும் சென்னையில், 2,666 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் துவங்க, தமிழக அரசுடன் நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.அரசு முறை பயணமாக, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இதுவரை சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில், உலகின் 14 முன்னணி தொழில் நிறுவனங்களுடன், 4,350 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. நேற்று முன்தினம் ஜாபில், ராக்வெல் ஆட்டோமேஷன், ஆட்டோடெஸ்க்' ஆகிய நிறுவனங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜாபில்
இந்நிறுவனம் 'ஆப்பிள், சிஸ்கோ, எச்.பி., டெல்' போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு, எலக்ட்ரானிக்ஸ் தொழில் உற்பத்தி சேவைகள் மற்றும் தீர்வுகளை வழங்கி வருகிறது. தற்போது திருச்சியில், 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், 5,000 பேருக்கு வேலை அளிக்கும் வகையில், மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைக்க, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ராக்வெல் ஆட்டோமேஷன்
இந்நிறுவனம், தொழில்துறை ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான மிகப்பெரிய நிறுவனம். இதன் தலைமையகம் அமெரிக்காவின் விஸ்கான்சின்னில் உள்ள மில்வாக்கியில் அமைந்துள்ளது. இந்நிறுவனம், காஞ்சிபுரத்தில் உள்ள தன் மின்னணு உற்பத்தி நிறுவனத்தின் விரிவாக்கத்தை, 666 கோடி ரூபாயில் மேற்கொள்ள, தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்தது. ஆட்டோடெஸ்க்
இது அமெரிக்க பன்னாட்டு நிறுவனம். கட்டடக்கலை, பொறியியல், கட்டுமானம், உற்பத்தி, ஊடகம், கல்வி, பொழுதுபோக்கு தொழில்களுக்கான மென்பொருள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது.தமிழக இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த, சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில், போட்டித்தன்மையை மேம்படுத்த, தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.திருச்சியில் மின்னணு உற்பத்தி ஆலை அமைக்க, 'ஜாபில்' நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.