மூன்றில் ஒரு லிப்ட் தமிழகத்தில் தயாராகிறது: தமிழக அரசு அறிக்கை
சென்னை; இந்தியாவில் உற்பத்தியாகும் மூன்று மின் துாக்கிகளில் ஒன்று, தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுவதாகவும்; ஆண்டுதோறும் தமிழகத்தில் 25,000 மின் துாக்கிகள் தயாரிக்கப் படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்து உள்ளது. அரசு வெளியிட்ட அறிக்கை: வாகனங்கள், மின் சாதனங்கள், ஆடைகள் உற்பத்தி துறைகளில், சிறப்பு திறன் கொண்ட மாநிலமாக தமிழகம் தன்னை நிரூபித்துள்ளது. அதனுடன், 'லிப்ட்' எனப்படும் மின் துாக்கிகள் உற்பத்தி துறையிலும் முன்னோடியாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் 80,000 முதல் 85,000 மின் துாக்கிகள் தேவைப்படுகின்றன. சீனாவிற்கு அடுத்து இந்தியா, மின் துாக்கிகள் மற்றும் எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் படிக்கட்டுகள் பயன்பாட்டில், உலகின் இரண்டாவது பெரிய சந்தையாக உள்ளது. இந்த தேவையில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவை, தமிழக உற்பத்தியாளர்களால் நிறைவு செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகம் இந்தியாவை தாண்டி உலகளாவிய மின் துாக்கிகள் உற்பத்தி மையமாக தன்னை மாற்றிக்கொள்ளும் பாதையில் முன்னேறி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் ஓராண்டுக்கு 80,000 -- 85,000 லிப்ட்கள் தேவை தமிழகத்தில் ஓராண்டில் 25,000 லிப்ட்கள் தயாராகின்றன சீனாவுக்கு அடுத்து லிப்ட், எஸ்கலேட்டர் பயன்பாட்டில் இரண்டாவது பெரிய சந்தை இந்தியா உலகளாவிய லிப்ட் உற்பத்தி மையமாக உருவாகி வருகிறது தமிழகம்.