சென்னை:உலகின் முன்னணி மின்வாகன தயாரிப்பு நிறுவனமான 'வின்பாஸ்ட்', தமிழ்நாட்டில் கார் தொழிற்சாலை தொடங்குவதை உறுதி செய்துள்ளது.வியட்நாமை சேர்ந்த பன்னாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட், மின்வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், வியட்நாமின் மிகப்பெரிய தனியார் குழுமங்களில் ஒன்றான, 'வின்குரூப்'பால் உருவாக்கப்பட்டது. தற்போது இந்நிறுவனம், துாத்துக்குடியில், 16,000 கோடி ரூபாய் மதிப்பில், மின்சார கார் மற்றும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. வசதி
முதற்கட்டமாக, 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், ஆண்டுக்கு 1.50 லட்சம் மின்சார கார் தயாரிக்கும் திறன் கொண்ட தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொழிற்சாலை கட்டுமானம், நடப்பாண்டில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் செயல்பட்டு வந்த, 'போர்டு' நிறுவனத்தின் கார் தொழிற்சாலையில் மின்சார கார் தயாரிக்க, வின்பாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் அந்த இடம் கிடைக்கவில்லை. இதனால், தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க வின்பாஸ்ட் ஆர்வம் காட்டவில்லை. இந்த தகவல் தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றதையடுத்து, தமிழகத்தில் தொழில் துவங்க வருமாறும், தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும், வின்பாஸ்ட் நிறுவன அதிகாரிகளிடம் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, இந்நிறுவனம் தற்போது சென்னையை போல் துறைமுக வசதி உடைய துாத்துக்குடி மாவட்டத்தில், 400 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்க முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாக உள்ளது. பசுமை ஆற்றல்
தமிழகத்தில் முதலீடு செய்வது, இருதரப்பினருக்கும் பொருளாதார நன்மைகளை அளிப்பதுடன், இந்தியாவில் பசுமை ஆற்றல் மாற்றத்தையும் விரைவுபடுத்தும் என வின்பாஸ்ட் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி., ராஜா தெரிவித்துள்ளதாவது:மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்கள், பொருளாதாரத்தை வழிநடத்துவதில் முக்கிய பங்காற்றுவதுடன், மாநிலத்தின் பசுமை ஆற்றல் நோக்கத்துக்கும் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. அந்த வகையில், வின்பாஸ்ட் நிறுவனம், நம்பகமான பொருளாதார கூட்டாளியாகவும், தமிழ்நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பாளராகவும் இருக்கும்.இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
பெரும் பாய்ச்சல்
துாத்துக்குடியில் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை அமைவது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல். தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு, இந்த பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் வின்பாஸ்ட் நிறுவனத்தாருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள்.இவ்வாறு பதிவிட்டுள்ளார்.