| ADDED : நவ 04, 2024 01:22 AM
மும்பை:தேசிய பங்குச் சந்தை யான என்.எஸ்.இ., புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் வாயிலாக தனது இணைய தள சேவையை, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகள் உட்பட 11 மொழிகளில் துவங்கியுள்ளது. பங்கு வர்த்தக விபரங்களை மாநில மொழிகளில் வழங்குவதன் வாயிலாக, நிதி சார்ந்த புள்ளிவிபரங்களை, நாடு முழுவதும் முதலீட்டாளர்கள் அவரவர் மொழிகளில் அறிய வாய்ப்பு ஏற்படும் என என்.எஸ்.இ., தெரிவித்து உள்ளது. மேலும், மாநில மொழிகளில் தேசிய பங்குச் சந்தையின் இணைய தளத்தை பயன்படுத்த இயலும் என்பதால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். மேலும், நிதி சார்ந்த தகவல்களை மொழி புரியாமல் தவிர்த்து வந்த பலரும், இனி அதில் ஆர்வம் காட்ட இயலும் என்றும் பங்குச் சந்தை நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.'என்.எஸ்.இ., இந்தியா' மொபைல் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐ.ஓ.எஸ்., தளங்களில் பதிவிறக்கம் செய்து, பங்குச் சந்தை குறித்த தகவல்களைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.இவை தவிர, ஏற்கனவே அளிக்கப்பட்டு வரும் ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி மற்றும் குஜராத்தி மொழிகள் வசதியும் தொடரும் எனவும் என்.எஸ்.இ., அறிவித்துள்ளது.