உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளிநாட்டில் இருந்து ரூ.220 கோடி நிதி கேரள அறக்கட்டளை மீது ஈ.டி., வழக்கு

வெளிநாட்டில் இருந்து ரூ.220 கோடி நிதி கேரள அறக்கட்டளை மீது ஈ.டி., வழக்கு

புதுடில்லி: வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக, 220 கோடி ரூபாய் பெற்றதாக கேரளாவை சேர்ந்த அறக்கட்டளை மீது ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை அன்னிய செலாவணி முறைகேடு வழக்கு பதிவு செய்துள்ளது. கேரளாவின் காசர்கோடில், குன்ஹாமது முஸிலியார் நினைவு அறக்கட்டளையின் அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் தலைவராக வெளிநாடு வாழ் இந்தியரான இப்ராஹிம் அகமது அலி என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த அறக்கட்டளையின் கணக்கு வழக்குகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அமலாக்கத் துறை இவ்வழக்கை விசாரித்த நிலையில், காசர்கோடு பகுதியில் உள்ள அந்த அறக்கட்டளைக்கு சொந்தமான இரு இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. 'பெமா' எனப்படும் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த சோதனையில், வெளிநாட்டில் இருந்து இந்த அறக்கட்டளைக்கு கோடிக்கணக்கில் பணம் வந்திருப்பது தெரிந்தது. அவற்றுக்கு முறையாக கணக்குகள் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது. அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கை: அறக்கட்டளைக்கு அதன் தலைவர் இப்ராஹிம் அகமது அலி மூலம் கடந்த 2021 முதல் நிதி திரட்டப்பட்டது. இதன் மூலம், 220 கோடி ரூபாய் வரை அறக்கட்டளைக்கு நன்கொடை வந்துள்ளது. ஆனால், அறக்கட்டளையின் கணக்கு புத்தகங்களில் அதை 'பாதுகாப்பற்ற கடன்' என குறிப்பிட்டிருந்தது. எனினும், கடன் வாங்கியதற்கான ஒப்பந்தமோ, வட்டி விகிதங்களோ, திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் கொண்ட ஆவணங்களோ எதுவும் இல்லை. இந்த நிதியை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள, 'யூனிவர்ஸல் லுப்ரிகன்ட்ஸ்' என்ற கம்பெனியிடம் இருந்து அலி பெற்றதாக தெரியவந்தது. வெளிநாட்டில் இருந்து கடன் பெற்றதற்கான எந்த ஆவணங்களும் முறையாக இல்லாததால், அறக்கட்டளை மீது வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை