புதுடில்லி: சட்டவிரோத மணல் குவாரி முறைகேடு வழக்கில், தமிழகத்தின் ஐந்து மாவட்ட கலெக்டர்களை அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராகும்படி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.தமிழகத்தின் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதில் கிடைத்த வருமானத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. சம்மன்
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, தமிழக அரசுத்துறை உயர் அதிகாரிகள், வேலுார், திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலுார் மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் ஐந்து மாவட்ட கலெக்டர்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை விதித்தது. இருப்பினும், விசாரணையை தொடர அனுமதி அளித்தது.அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 'ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே நேரம், சம்மனுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறையும் சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்தது.ஈ.டி., தாக்கல் செய்த மனு நேற்றுமுன் தினம் விசாரணைக்கு வந்தபோது, 'மாநிலத்தில் குற்றம் நடந்திருந்தால் அதை கண்டுபிடிக்க அமலாக்கத்துறைக்கு தமிழக அரசு உதவுவதில் என்ன தீங்கு நேர்ந்துவிடப் போகிறது' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:அமலாக்கத்துறையின் சம்மனை எதிர்த்து தமிழக அரசும், அதிகாரிகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது விசித்தரமான மற்றும் அசாதாரணமான செயல். நேரில் ஆஜர்
இந்த வழக்கு தொடர்பாக பதியப்பட்ட நான்கு எப்.ஐ.ஆர்.,களின் அடிப்படையில் பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணையை துவங்கி உள்ளது. மாவட்ட கலெக்டர்கள் உட்பட சம்மன் பெறப்பட்ட அனைவரும் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு மதிப்பளித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும். எனவே, இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. அமலாக்கத்துறையினர் அடுத்து குறிப்பிடும் தேதியில் ஐந்து மாவட்ட கலெக்டர்கள், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.