குஜராத் உள்ளாட்சி தேர்தல்; 215 பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
ஆமதாபாத்: குஜராத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 215 பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 2023ம் ஆண்டு நகராட்சி மற்றும் ஊராட்சி தேர்தல்களில் 27 சதவீதம் ஓ.பி.சி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு செய்து குஜராத் மாநில அரசு உத்தரவிட்டது. அதன்பிறகு, முதல்முறையாக, குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பா.ஜ.,வைச் சேர்ந்த 215 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். நகராட்சியில் 196 இடங்களிலும், மாவட்ட, தாலுகா பஞ்சாயத்துகளில் 10 பேரும், ஜூனாகத் மாநகராட்சியில் 9 கவுன்சிலர்களும் பா.ஜ., சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, மொத்தம் 8,235 இடங்களில் 237 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.