| ADDED : ஆக 19, 2024 09:41 PM
புதுடில்லி: உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவத்துவங்கியுள்ளதையடுத்து, இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று பிரதமரின் முதன்மை செயலாளர் ஆர்.கே.மிஸ்ரா சுகாதாரத்துறை உயரதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க விமான நிலையங்கள், துறைமுகங்களில் கண்காணிக்கவும், அண்டை நாடுகளான வங்கதேசம்,பாகிஸ்தான் ஆகிய எல்லை பகுதிகளில் நோய் பரவலை தடுத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது,டில்லியில் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, சப்தர்ஜங் மருத்துவமனை, லேடி ஹார்டிங்க் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் குரங்கு அம்மை நோய் தடுப்பு சிகிச்சையளிக்க படுக்கைகள் தயார் நிலையில் வைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் குரங்கு அம்மை பாதிப்பை கண்டறிந்து உறுதி செய்ய 32 ஆய்வகங்கள் தயார் நிலையில் உள்ளன.இதே போன்று மாநிலங்களிலும் சிறப்பு வார்டுகள், அமைத்து நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.