| ADDED : ஆக 05, 2011 03:44 AM
பெஹராம்பூர்:மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய காரணமான அமோனியம் நைட்ரேட் வெடிபொருளை பயங்கரவாதிகளுக்கு சப்ளை செய்த வாலிபர் ஒருவரை தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் நேற்று மேற்குவங்க மாநிலத்தில் பதுங்கியிருந்த போது கைது செய்தனர். மும்பையில் கடந்த மாதம் 13-ம் தேதி தாதர், ஜவேரி பஜார், ஒபேரா ஹவுஸ் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பில் 26 பேர் பலியாயினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பில் அமோனியம் நைட்டேர் வேதிப்பொருள் பெருமளவு பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்ட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள நூட்டுன் சந்திரா கிராமத்தைச் சேர்ந்த ஜியராத்ஷேக் (30) என்ற வாலிபரை நேற்று தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் கைது செய்தனர். அவன் தான் மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதற்காக பயங்கரவாதிகளுக்கு அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை சப்ளை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஜியராத்ஷேக்கை டில்லிக்கு அழைத்து சென்று விசாரிக்க உள்ளனர். முன்னதாக நூட்டுன் கிராமத்தில் ,செளட்டி போலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜியராத் ஷேக், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு , அமோனியம் நைட்ரேட் வெடிபொருளினை சட்டவிரோதமாக வைத்து சப்ளை செய்துவந்ததாக கைது செய்யப்பட்டான். எனினும் தகுந்த ஆதாரம் இல்லாததால் விடுதலையானான் என்றார்.