| ADDED : மார் 15, 2024 07:00 AM
கொடிகேஹள்ளி,: நகைக்கடைக்குள் நுழைந்த கொள்ளை கும்பல், துப்பாக்கி சூடு நடத்தியதில் கடை உரிமையாளர் உட்பட, இருவர் காயமடைந்தனர்.பெங்களூரு கொடிகேஹள்ளியின், தேவி நகரில் 'லட்சுமி பேங்கர்ஸ் அண்டு ஜுவல்லர்ஸ்' என்ற பெயரில், நகைக்கடை உள்ளது. நேற்று காலை 11:15 மணியளவில், உரிமையாளர் அப்புராம், அவரது உறவினர் அபிராம் உட்பட மூவர் கடையில் இருந்தனர்.அப்போது இரண்டு பைக்குகளில், நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் நகைக்கடைக்கு வந்தனர். இருவர் வெளியே நின்றிருந்தனர்; மற்ற இருவர் கடைக்குள் நுழைந்தனர். துப்பாக்கியை காண்பித்து மிரட்டி, தங்க நகைகளை கொள்ளையடிக்க முயற்சித்தனர். இவர்களை கடை உரிமையாளரும், மற்ற இருவரும் எதிர்த்து போராடினர்.உதவி கேட்டு கூச்சலிட்டனர். அப்போது அப்பகுதியினர் ஓடி வந்தனர். எனவே கொள்ளையர்கள், துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து பைக்குகளில் தப்பினர். ஓடும் அவசரத்தில் துப்பாக்கியை சம்பவ இடத்திலேயே விட்டு சென்றுள்ளனர்.தகவலறிந்து அங்கு வந்த கொடிகேஹள்ளி போலீசார், துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அப்புராம், அபிராமை மருத்துவமனையில் சேர்த்தனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். தடயவியல் ஆய்வக வல்லுனர்களும், அங்கு வந்தனர்.பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்த் கூறியதாவது:கொடிகேஹள்ளியில் உள்ள நகைக்கடை, பெரிய ஷோரூம் அல்ல. சிறிய கடை. இந்த கடை மிகவும் உட்பகுதியில் உள்ளது. கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது நால்வர் என்பது, விசாரணையில் தெரிந்தது. அவர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.