பாட்னா: பீஹார் முதல்வராக, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக நேற்று பதவியேற்றார். நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர் . பீஹாரில் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக கடந்த 6 மற்றும் 11ல் தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த கூட்டணி, 202 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜ., 89 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றன. கூட்டணி கட்சிகளான லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் பஸ்வான் 19; ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5; ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா 4 தொகுதி களிலும் வென்றன. இதையடுத்து, பீஹார் முதல்வராக, 10வது முறையாக நிதிஷ் குமார் நேற்று பதவி ஏற்றார். பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு, கவர்னர் ஆரிப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நிதிஷ் உடன், பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 26 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முந்தைய ஆட்சியில் துணை முதல்வர்களாக இருந்த பா.ஜ.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார் சின்ஹா உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 14 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கும், லோக் ஜனசக்தியைச் சேர்ந்த இருவருக்கும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா, தொடர்ச்சி 5ம் பக்கம் பீஹார் முதல்வராக... 3ம் பக்கம் தொடர்ச்சி பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வடகிழக்கு மாநிலமான அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், டில்லி முதல்வர் ரேகா குப்தா, தே.ஜ., கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரலாறு காணாத வெற்றியை தந்த பீஹார் மக்களுக்கு, பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் தே.ஜ., கூட்டணி தலைவர்கள் நன்றி தெரிவித்தனர். நிதிஷ் குமார் தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றதை அடுத்து, பா.ஜ.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய்குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டனர். முதல்வர் நிதிஷ் உட்பட பதவியேற்ற அனைவருக்கும், பிரதமர் மோடி தன் சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மவுனம் கலைத்த தேஜஸ்வி பீஹாரில் புதிய அரசு பதவியேற்றதற்கு, முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில், இதுவரை வாய் திறக்காமல் இருந்த அவர் நேற்று மவுனம் கலைத்தார். அவர் தன் சமூக வலைதளத்தில், 'முதல்வராக பொறுப்பேற்ற நிதிஷ் குமார் உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள். புதிய அரசு, மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகளையும், அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என நம்புகிறேன். அதேசமயம், பீஹார் மக்களின் வாழ்க்கையில், நேர்மறையான மற்றும் தரமான மாற்றங்களை கொண்டு வரும் என்றும் நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார். கருணாநிதியின் சாதனையை முறியடித்த நிதிஷ் குமார் கடந்த 2000 மார்ச் துவங்கி இதுவரை பல்வேறு ஆட்சிக் காலங்களில், 19 ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமையை நிதிஷ் பெற்றுள்ளார். இதன் வாயிலாக, நாட்டில் நீண்ட காலம் முதல்வர்களாக இருந்த முதல் 10 பேர் அடங்கிய பட்டியலில் இவர் இடம் பிடித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, பல்வேறு ஆட்சிக் காலத்தின் வாயிலாக, 18 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த நிலையில், அவரின் சாதனையை நிதிஷ் முறியடித்துள்ளார்.