உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கிடுக்கி

கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கிடுக்கி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அந்த விசாரணையை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு குழுவையும் அமைத்துள்ளது. மேலும், அதிகார வரம்பை மீறி சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது தொடர்பாக கேள்வி எழுப்பியதுடன், உயர் நீதிமன்ற பதிவாளர் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.கரூரில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த மாதம் மேற்கொண்ட பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், த.வெ.க., தலைவர் விஜய்க்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eglhl1ok&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மறுபுறம் இதே மாதரியான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை' என கூறி, த.வெ.க., தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது.

மேல் முறையீடு

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், ஐ.ஜி., அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டார். இந்நிலையில், விஜய் குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தெரிவித்த கருத்துகளுக்கு எதிராகவும், சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டதற்கு எதிராகவும், த.வெ.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.அதே வேளையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குழந்தையின் தந்தை பன்னீர்செல்வம், மனைவியை இழந்த செல்வராஜ், பா.ஜ., வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆகியோர் சார்பில், சி.பி.ஐ., விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், கடந்த வாரம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா அமர்வில் விசாரிக்கப்பட்டன. அப்போது, போலீசார் கேட்டுக் கொண்டதால் தான் சம்பவம் நடந்த இடத்திலிருந்து விஜய் புறப்பட்டு சென்றதாகவும், இதை கவனத்தில் கொள்ளாமல் அவருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததாகவும் த.வெ.க., சார்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கிற்கான தீர்ப்பை நேற்று நீதிபதிகள் வெளியிட்டனர்.

குடிமக்கள் உரிமை

தீர்ப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது: கரூர் துயர சம்பவத்தை மக்களின் அடிப்படை உரிமை சார்ந்த விவகாரமாக கருதுகிறோம். 'பாரபட்சம் இல்லாமல், வெளிப்படை தன்மையுடன் விசாரணை நடக்க வேண்டும்' என கேட்பது குடிமக்களின் உரிமை. எனவே, இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றுகிறோம். சி.பி.ஐ., விசாரணையை கண்காணிக்க, சிறப்பு குழுவையும் அமைக்கிறோம். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில், தமிழகத்தைச் சாராத இரு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அந்த சிறப்பு குழுவில் இடம் பெறுவர். மூன்று பேர் அடங்கிய சிறப்பு குழு, கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் தொடர்பாக விசாரணை நடத்தலாம். தேவைப்பட்டால் சிறப்பு குழு, எந்த நேரத்திலும் உச்ச நீதிமன்றத்தை நாடலாம். சி.பி.ஐ., தங்கள் மாதாந்திர விசாரணை அறிக்கையை, சிறப்பு குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மிகப்பெரிய சதி

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, 'இந்த விவகாரத்தில் மனுதாரர்கள் பன்னீர்செல்வம், செல்வராஜ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாங்கள் எந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை' என கூறியுள்ளதாக தெரிவித்தார். 'தங்களது பெயரில் போலியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். இதில் மிகப்பெரிய சதி நடந்துள்ளது. அவர்கள் இருவரும், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆஜராகி உள்ளனர். நீதிபதிகள் நேரடியாக அவர்களிடமே விசாரிக்கலாம்' என வாதிட்டார். இதை பதிவு செய்த நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் தமிழக அரசு விரும்பினால், தனியாக மனு தாக்கல் செய்யலாம்; தேவைப்பட்டால், அதையும் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற உத்தரவிடுகிறோம்' என தெரிவித்தனர். அதன் பின், சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தை விசாரித்த விதம் குறித்து அதிருப்தி தெரிவித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை நியமித்த பிறகும், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த, எதற்காக சிறப்பு விசாரணை குழுவை உயர் நீதிமன்றம் அமைத்தது? இந்த விவகாரம் உயர் நீதிமன்ற மதுரை கிளை வரம்புக்குள் வருகிறது. அவ்வாறு இருக்கையில், சென்னை உயர் நீதிமன்றம் ஏன் இந்த விவகாரத்தை விசாரித்தது? வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக தாக்கல் செய்த ஒரு வழக்கை, கிரிமினல் வழக்காக மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது ஏன்? அதிகார வரம்பை மீறி சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது குறித்து, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், 'இந்த வழக்கை முடித்து வைக்கவில்லை' என தெளிவுப்படுத்திய நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பன உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம்' என உறுதியுடன் தெரிவித்தனர்.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

* கரூரில், த.வெ.க., நடத்திய பிரசார நிகழ்ச்சி நடந்த இடத்தில், கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் வேறு ஒரு கட்சிக்கு அனுமதி என்பது மறுக்கப்பட்டிருக்கிறது. * இந்த விவகாரம் தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரிகள் ஊடகங்களிடம் அரசியல் தொனியில் பேசியது, சுதந்திரமான விசாரணை நடைபெறுமா என்ற கேள்வியை மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றுகிறோம். * சி.பி.ஐ., இயக்குநர் உடனடியாக மூத்த அதிகாரி அடங்கிய விசாரணை குழுவை அமைக்க வேண்டும். * கரூர் போலீஸ், உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணை குழு மற்றும் தமிழக முதல்வர் அமைத்த ஒரு நபர் ஆணையம் ஆகியவை, இதுவரை விசாரித்த அத்தனை ஆவணங்களையும் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். * தமிழக முதல்வர் அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் விசாரணை நிறுத்தப்படுகிறது. * வழக்கு விசாரணையில் சி.பி.ஐ.,க்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். * சி.பி.ஐ., விசாரணையை மேற்பார்வையிட அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவிற்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும். * சி.பி.ஐ., மாநில அரசு மற்றும் மேற்பார்வை குழு ஆகியவற்றுக்கு இடையே முறையான தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்ய, தமிழக அரசு தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்.

சி.பி.ஐ., விசாரணையை தி.மு.க., எதிர்ப்பது ஏன்?

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம், சி.பி.ஐ., விசாரணைக்கு செல்ல வேண்டும் என்று, முதன் முதலில் கோரிக்கை வைத்ததே தமிழக பா.ஜ., தான். இது, 41 உயிர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு. முன்னாள் நீதிபதி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை; சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ.,க்கு மாற்றியதுடன், விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதியையும் நியமித்துள்ளது. இது, மகிழ்ச்சி அளிக்கிறது; தீர்ப்பை வரவேற்கிறோம். நீதி வெல்லும். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரியாக இருந்தாலும், அரசியல் கட்சியினராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கரூரில் பாதிக்கப்பட்ட, 41 குடும்பங்களில் அவர்களுக்கு தெரியாமல், இரு நபர்களிடம் பொய் சொல்லி கையெழுத்து வாங்கி, அவர்களையும் வழக்கில் மனுதாரராக சேர்த்து உள்ளனர். சம்பந்தப்பட்ட இருவர், தங்களின் கையெழுத்தை பொய் சொல்லி வாங்கி இருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, பொய் சொல்லி கையெழுத்து வாங்கியது யார் என்று விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு, சீமான் ஏன் பதற்றப்படுகிறார் என, தெரியவில்லை. எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது, குட்கா ஊழல் புகார், துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், மவுலிவாக்கத்தில் கட்டடம் இடிந்த விவகாரம் என, பல சம்பவங்களில், சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்று கோரியுள்ளார். ஆளும் கட்சியாக இருக்கும் போது தி.மு.க., ஏன் எதிர்க்கிறது? சி.பி.ஐ.,யை வைத்து அரசியல் செய்வது தி.மு.க., என்பதும், முதல்வர் ஸ்டாலின் என்பதும், தமிழக மக்களுக்கு தெரியும். த.வெ.க., சார்பில், அதன் தலைவர் விஜய், வரும், 17ம் தேதி கரூர் வருவதாக கூறி, நிறைய திருமண மண்டபங்களை கேட்டு அனுமதி கொடுத்துள்ளனர். பா.ஜ.,வினரின் மண்டபத்தையும் கேட்டுள்ளனர். யார் வந்து கேட்டாலும் கொடுக்கலாம் என்று கூறியுள்ளோம். இதுதான் பா.ஜ., நிலைப்பாடு. விஜய் செல்லலாம்; மக்களை சந்திக்கலாம். விஜய் வரும் போது கூட்டம் சேரும் என்றால், பாதுகாப்பு கொடுப்பது காவல் துறை கடமை. இவ்வாறு அவர் கூறினார்.

அவமதிப்பு

இதற்கிடையில், சென்னையில் பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ''சி.பி.ஐ., விசாரணை, மாநில தன்னாட்சிக்கு நிகழ்ந்த அவமதிப்பு. போலீஸ் விசாரணையில் என்ன குறை உள்ளது. சி.பி.ஐ., விசாரணை என்றால், தமிழக காவல்துறை தன் தோல்வியை ஒப்புக்கொள்கிறதா. சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு இரண்டு அல்லது மூன்று மூளையா உள்ளது' என, தெரிவித்தார்.

நீதி வெல்லும்: விஜய்

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, சென்னை திரும்பிய த.வெ.க., தலைவர் விஜய் வீட்டிலேயே முடங்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, விஜய் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு, விஜய்க்கும், அவரது கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. இந்த உத்தரவை வரவேற்கும் வகையில், தன் சமூக வலைதள பக்கத்தில், 'நீதி வெல்லும்' என விஜய் கருத்து தெரிவித்துள்ளார். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

தலைவன்
அக் 17, 2025 14:18

இவரால் எப்படி இப்படியெல்லாம் பேச முடிகிறது???


ramesh
அக் 14, 2025 22:16

விஜய் கருத்து நீதி வெல்லும் என்று சொன்னது சரிதான் . ஏன் என்றால் நடந்த உண்மை என்ன என்பது அவருக்கு நல்லாவே தெரியும் அவரது கூட்டத்தில் ரசிகர்கள் நெருக்கத்தால் என்று . எனவே நீதி வெல்லும் என்று சொல்லும் போது தான் தான் பாதிக்க படப்போகிறோம் என்பதை மறந்து விட்டு கருத்து சொல்லி விட்டார்


Mariadoss E
அக் 14, 2025 20:41

எனக்கென்னவோ இந்த கேஸ் தீர்ப்பு தவெக வுக்கு பெரிய தலைவலியாக இருக்கும் என்றே தோன்றுகிறது. விஜய்க்கு அறிவுரை சொல்லவோ, வழிநடத்தவோ சரியான ஆட்கள் இல்லை அதுபோக அனுபவ முதிர்ச்சியும் இல்லை. கொள்கை கோட்பாடும் தெளிவில்லை. இதெல்லாம் அரசியலுக்கு ஒத்து வராத விசயங்களாகவே தோன்றுகிறது.


Kasimani Baskaran
அக் 14, 2025 19:38

கவனக்குறைவால், பாதுகாப்பின்மையால், காவல்துறையின் மெத்தனத்தால் 41 உயிர்கள் பலியிடப்பட்டன. யாருடைய பிள்ளை என்பது முக்கியமில்லை. யார் கேள்வி கேட்டார் என்பது முக்கியமில்லை. இதில் வேற்றுமை காண்பது அடிமைத்தனத்தின் உச்சக்கட்டம் என்றே சொல்லலாம்.


Senthoora
அக் 14, 2025 20:33

இந்தளவு பாதுகாப்புமைகள் வரிப்பணத்தில் கொடுத்ததே அதிகம், விஜய் என்ன அரசு அதிகாரத்தில் இருக்கிறார், அவரின் ஆண்டார்கள் எங்கே கூட்டத்தை கட்டுப்படுத்த, சொன்னநேரத்துக்கு வந்தா பிரச்சனை வந்திருக்காதே, சும்மா சிங்கப்பூர் சீமான் போல பேசாதீங்க.


அப்பாவி
அக் 14, 2025 18:34

கிடுக்கியாவது இடுக்கியாவது. எல்லோரும் வழுக்கி எஸ்கேப் தான்.


SUBRAMANIAN P
அக் 14, 2025 17:35

சீமானுக்கு, அவருக்கெதிரா ஆளும்கட்சி சொல்வதைக்கேட்டு போலீஸ் நடந்தா அப்போ தமிழக போலீஸ் விசாரணை சரியில்லைன்னு சொல்லுவாரு.. இப்போ விஜய்க்கு அது எதிரா இருக்கும்னு சிபிஐ விசாரணை கேட்டா சீமானுக்கு தமிழக போலீஸ் மீது கரிசனம் வந்து விஜய்க்கு நீதிக்கு எதிராவும் கருத்து சொல்ல தோணுது... தனக்கேத்தமாதிரி அடிக்கடி நிறம்மாறும் பச்சோந்தி சீமான்.. வைகோ போல வீணாப்போன அரசியல்வாதி


Keshavan.J
அக் 14, 2025 14:47

60 வருஷ பார்ட்டி ஒன்னரை வருட பார்ட்டி யோடு சண்டை போடுது பயப்படுது . நான் விஜய் ரசிகனும் இல்லை பார்ட்டியிலும் இல்லை. ஆனால் நான் ஆண்டவனை வேண்டுகிறேன். விஜய் பார்ட்டி குறைந்தது 25 MLA செஅட் ஜெயிக்கணும் இவர்கள் முகத்தில் கரி பூசணும்.


Srprd
அக் 14, 2025 14:43

The judge of the Madras HC should be impeached for grossly exceeding his limits.


angbu ganesh
அக் 14, 2025 14:42

இந்த சீமானுக்கு அறிவு இருக்க இல்லையா ஏம்ப்பா சிபிஐ ன்றது மத்திய ஆய்வு குழு இதுல தமிழக பெருசாலிகள் தலையிட முடியாது அதனால்தான் சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது நீயெல்லாம் ஒரு அரசியல் கட்சிக்கு தலைவர் தூஊ


Senthoora
அக் 14, 2025 14:04

விஜய் மோடிஜியை திட்டினார், இப்போ எப்படி? விஜய் புரியனும், உளவுஅறிக்கை சரியாய் அரசியல் அறிக்கை விஜய் பற்றி சொல்லும் நாள் வரும், அப்போ இதே சிபிஐ விஜய்ய தூக்கி உள்ளே போடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை