சத்தீஸ்கரில் சோகம்; எஃகு ஆலை கட்டடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 6 பேர் பலி; 5 பேர் படுகாயம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் எஃகு ஆலை கட்டடம் இடிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் தனியார் எஃகு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென கட்டடம் இடிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் மீட்பு பணிகள் தொடர்கின்றன என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சத்தீஸ்கரில் கட்டடம் இடிந்து தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.