மண் சரிந்து இருவர் பலி
மூணாறு:தனியார் விடுதியில் கட்டுமான பணியின் போது மண் சரிந்து இருவர் உயிரிழந்தனர். கேரள மாநிலம், மூணாறு காலனியை சேர்ந்தவர் செபின்; வெளிநாட்டில் உள்ளார். இவருக்கு மூணாறு அருகே சித்திராபுரத்தில் உள்ள தங்கும் விடுதியில் கட்டுமான பணி நடந்தது. அப்போது, நேற்று மாலை பெய்த பலத்த மழையில், மண் சரிவு ஏற்பட்டு பணியில் இருந்த தொழிலாளர்கள் பைசன்வாலியை சேர்ந்த பென்னி, 49, ஆனச்சாலை சேர்ந்த ராஜிவ், 40, ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களின் உடலை, தீயணைப்பு துறையினர் மீட்டனர். வெள்ளத்துாவல் போலீசார் விசாரிக்கின்றனர். மூணாறு சிறப்பு தாசில்தார் காயத்ரி கூறுகையில், ''விடுதியில், விதிமீறி கட்டுமான பணிகள் நடப்பதாக தெரிய வந்ததால், அதை நிறுத்த, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. அதை மீறி பணி நடந்ததால், மண் சரிவு ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி கலெக்டர் தினேசன்செருவாட்டிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.