உள்ளூர் செய்திகள்

திறமை இருந்தும்... சாதிக்க முடியாமல் திணறும் மாணவ, மாணவியர் அரசு பள்ளியில் விளையாட்டு கட்டமைப்பு எப்போது?

திருப்பூர்: தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளிலும், விளையாட்டு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. திருப்பூரில், திறமையான விளையாட்டு வீரர்கள் அதிகளவில் இருப்பினும், மாவட்ட, மாநில அளவிலான அடிப்படை விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும், தனியார் பள்ளி வளாகங்களிலேயே நடைபெறுகிறது.பள்ளி மாணவர்களின் விளையாட்டு பயணத்தின் முதல் படி, குறுமைய போட்டிகளே. இதில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்தடுத்து நடக்கும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுகின்றனர். திருப்பூரில் இத்தகைய ஆரம்பக்கட்ட போட்டிகளை நடத்துவதற்கு கூட உள்கட்டமைப்பு கொண்ட அரசுப்பள்ளி மைதானங்கள் இல்லை.இதனால், போட்டிகளை நடத்த கல்வித் துறையும் விளையாட்டுத் துறையும், தனியார் பள்ளிகளின் தயவை நாட வேண்டிய நிலை நீடிக்கிறது. தனியார் பள்ளிகளில் போட்டிகள் நடக்கும் போது, அங்குள்ள அதிநவீன செயற்கை புல்வெளி மைதானங்கள், நவீன வசதிகளை பார்த்து அரசுப்பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்கள் ஒருவித தயக்கத்துடனேயே களமிறங்குகின்றனர்.போட்டிக்கு முன் பயிற்சி பெற, அரசுப்பள்ளி மைதானங்களில் முறையான தடகளப் பாதைகளோ அல்லது சரியான ஆடுகளங்களோ இல்லாததால், தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிடுவதில் பின்னடைவை சந்திக்கின்றனர். திறமை இருந்தும், விளையாட்டு கட்டமைப்பு வசதிகள் இல்லாத ஒரே காரணத்தால் அரசுப்பள்ளி மாணவர்கள் தடுமாறும் சூழல் உருவாகியுள்ளது.தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர், 'ஒவ்வொரு மாவட்டத்திலும் சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு உருவாக்கப்படும்' என்ற தொலை நோக்கு பார்வையோடு மாநிலம் முழுதும் விளையாட்டை ஊக்குவித்து வருகிறார். இந்நிலையில், திருப்பூரின் இந்த உள்கட்டமைப்பு இடைவெளியை போக்க, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை முழுமையாக வெளிக்கொண்டு வர, அரசுப் பள்ளிகளின் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்துவதே நிலையான தீர்வாக அமையும்.இதெல்லாம் அவசியம் திருப்பூர் மாவட்டத்தில், குறைந்தது ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு 'மாதிரி அரசு விளையாட்டு மைதானம்' உருவாக்க வேண்டும். திருப்பூரின் மையப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளி மைதானங்களை 'சிந்தெடிக்' போன்ற சர்வதேச தரத்தில் தரம் உயர்த்த வேண்டும். அவிநாசி, பல்லடம், காங்கயம் உள்ளிட்ட தாலுகா அளவிலும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேக விளையாட்டு அரங்கங்கள் மற்றும் உள் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட வேண்டும். கட்டமைப்பு மட்டுமின்றி, சர்வதேச தரத்திலான உபகரணங்களும், தகுதிவாய்ந்த உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் பயிற்சியாளர்களை, அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்