கலப்பட உணவு பொருட்களை கண்டறிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த கோரிக்கை
பள்ளிப்பாளையம்: 'பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் உணவுப் பொருட்களில் கலப்படம் கண்டறிவதற்கான விழிப்புணர்வும், செயல் விளக்க கண்காட்சியும் நடத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.பள்ளிப்பாளையத்தில் வெப்படை, ஆவத்திபாளையம், கொக்கராயன்பேட்டை, காவிரி, ஐந்து பனை, அக்ரஹாரம் உள்ளிட்ட சுற்று வட்டாரம் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். தொழிலாளர்கள் அதிகளவு வசிக்கும் பகுதி என்பதால், பெரும்பாலான கடையில் கலப்படம் கொண்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கலப்படம் நிறைந்த பொருட்களை வாங்கும் தொழிலாளர்களுக்கும் தெரிவதில்லை. கலப்பட உணவுப்பொருட்களை கண்டறியும் வகையில், மக்கள் கூடும் இடங்களில் முகாம் அமைத்து கண்காட்சியும், விழப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என, மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இது குறித்து பள்ளிப்பாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் கூறுகையில், "கலப்பட உணவுப்பொருட்களை கண்டறியும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, அடுத்த மாதம் ஆவாரங்காடு பகுதியில் உள்ள நகராட்சி மண்டபத்தில் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்றார்.