மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
புதுடில்லி: வளர்ந்த இந்தியா என்ற நோக்கத்தை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டியது முக்கியம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் முதல்வர்கள் துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:வளர்ந்த நாடுகள் நிச்சயமற்ற சூழ்நிலையையும், பொருளாதார சவால்களையும் சந்திக்கும் நேரத்தில் இந்தியா வளர்ந்து வருவது உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ளது. தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற நாட்டின் தீர்மானத்தை வலுப்படுத்த வேண்டும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட முக்கியமான துறைகளில் உலகத்தில் உள்ள சிறந்த நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதும் அதனை அமல்படுத்துவதும் சிறந்தது. வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது முக்கியம். வளர்ந்த இந்தியாவிற்கான கொள்கை என்பது ஒவ்வொரு மாநிலம் மாவட்டங்களுக்கான கூட்டுத் தீர்மானமாக இருக்க வேண்டும்.இந்தியாவில் உள்ள 70 கோடி இளைஞர்கள் நாட்டின் சொத்துக்களாக திகழ்கின்றனர். இளைஞர்களுக்கும் சிறு குறு தொழில் செய்வோர்களுக்கும் மாநில அரசுகள் வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். இந்தியா பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. அந்நாடுகளில் இருந்து அந்நிய முதலீட்டை ஈர்க்க வேண்டும். செயற்கை நுண்ணறிவை ஒரு வாய்ப்பாக கருதி அதற்கு ஏற்றவாறு எதிர்கால திறன்களை இளைஞர்களுக்கு மக்களுக்கும் கற்றுக் கொடுக்கலாம்.போதை மருந்து மற்றும் சைபர் மோசடிகளுக்கு எதிராக மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்பது முக்கியம். எல் நினோ காரணமாக இருந்துள்ள சவால்களில் கவனம் செலுத்தப்படுவதுடன் தண்ணீர் சேகரிப்பிற்கும் இயற்கை விவசாயத்திற்கும் மாநில அரசுகள் கவனம் செலுத்துவது அவசியம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.