தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுத்தேர்வு விடைத்தாள் பெறலாம்
சென்னை: 'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், பொதுத்தேர்வு விடைத்தாள்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பெறலாம்' என, மாநில தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி, மாநில தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவில், மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி பிறப்பித்த உத்தரவு:உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், அரசு தேர்வு இயக்ககத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி அல்லது தகவல் பெறும் உரிமை கட்டண விதிகளின்படி, பக்கத்திற்கு 2 ரூபாய் செலுத்தி, மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை பெறலாம்.அந்த வகையில், மனுதாரர் பிரியதர்ஷினி கேட்ட விடைத்தாள் நகல்களை, ஏழு நாட்களுக்குள், அரசு தேர்வு இயக்ககம் வழங்க வேண்டும்.மனுதாரரின் முதல் மேல்முறையீட்டை சரிவர கையாளாமல், நன்னடத்தை விதிகளை மீறி, தகவல்களை வழங்காமல் செயல்பட்ட, மேல் முறையீட்டு அலுவலர் மீது, அரசு தேர்வுகள் இயக்குநர், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனி வரும் காலங்களில், அரசு தேர்வுகள் இயக்ககம், எவ்வளவு மாதங்கள் திருத்தப்பட்ட விடைத்தாளை பராமரிக்கிறதோ, அந்த குறிப்பிட்ட காலத்திற்குள், பக்கத்திற்கு 2 ரூபாய் வீதம் செலுத்தி, மாணவர்கள் நகல்களை பெற்றுக் கொள்ளலாம் .மாணவர்களின் நலன் கருதி, விடைத்தாள்களை மின்னணு வடிவத்தில் மாற்றம் செய்து பாதுகாக்கவும், பாதுகாக்க வேண்டிய திருத்தப்பட்ட விடைத்தாள்களின் காலக்கெடு, மூன்று மாத காலமாக குறைக்கப்பட்டதை, மீண்டும் ஆறு மாத காலமாக மாற்றி அமைக்கவும், இவ்வாணையம் உத்தரவிடுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.