எஸ்.ஆர்.எம்., பல்கலையில் சிறப்பு யோகா பயிற்சி முகாம்
சென்னை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில் யோகா பயிற்சி முகாம் நடந்தது.மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் சார்பில், 12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, '100 நாள் - 100 நிறுவனம்' என்ற தலைப்பில், இந்தியா முழுதும், 100 கல்வி நிறுவனங்களில் யோகா விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில், நேற்று யோகா பயிற்சி முகாம் நடந்தது. இதில், நாட்டின் மூன்று சிறந்த பேச்சாளர்கள் பங்கேற்று, யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர். தொடர்ந்து, யோகா பயிற்சியும் நடத்தப்பட்டது.காலை 07:00 மணி முதல் யோகா பயிற்சியுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி, காலை 10:00 மணிக்கு யோகா தொடர்பான விழிப்புணர்வுடன் நிறைவுபெற்றது. இதில், மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர்.