கல்வியை வியாபாரம் ஆகிவிட்டனர்: அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டு திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் மிக அதிகரித்து இருப்பது மத்திய கல்வித்துறை அறிக்கை மூலம் தெரியவந்து இருக்கிறது என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம், மிக அதிகரித்துள்ளது, மத்திய கல்வித்துறை அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.கடந்த 2021 - 22ம் ஆண்டிலிருந்து, தற்போது மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், தொடக்கப் பள்ளி வகுப்புகளில் 0%ல் இருந்து 2.7% ஆகவும், நடுநிலை வகுப்புகளில் 0%ல் இருந்து 2.8% ஆகவும், உயர்நிலை வகுப்புகளில் 4.47%ல் இருந்து 8.5% ஆகவும் அதிகரித்துள்ளது.கடந்த நான்கரை ஆண்டுகளாக, தனியார் பள்ளிகள் நடத்தும் தி.மு.க.,வினர் பணம் சம்பாதிக்க, அரசுப் பள்ளிகளில், வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பறைகள் என, அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்காமல், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை முழுமையாக சிதைத்ததே, இதற்கு முக்கியக் காரணம்.உலகத் தரம் வாய்ந்த கல்வியை, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல், தனது கட்சிக்காரர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தி.மு.க., அரசு கொண்டு வந்த வினோத கல்விக் கொள்கை, ஒரு தோல்வியடைந்த கல்விக் கொள்கை என்பது நிரூபணமாகியிருக்கிறது.ஏழை, எளிய குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொஞ்சம் கூடக் கருத்தில் கொள்ளாமல், கல்வியை வியாபாரமாக்கி, நடுத்தர குடும்பத்தினர் மீது, பெரும் கடன் சுமையைத் திணித்திருக்கிறது தி.மு.க., அரசு. வரும் தேர்தல் முடிந்த பிறகு அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, அரசுப் பள்ளிகள் இழந்த பெருமையை நிச்சயம் மீட்டெடுக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.