உள்ளூர் செய்திகள்

கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம்

சென்னை: தமிழகத்தில் பொது - தனியார் கூட்டு முயற்சியில், முதலாவது விமான பயிற்சி நிலையம், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அமைகிறது.விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப, அதை இயக்கும் விமானிகளுக்கும் தேவை அதிகரித்து வருகிறது. அதே சமயம், நாட்டில் விமான பயிற்சி அளிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இதற்காக ஒருவர், 40 லட்சம் - 50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்கின்றனர்.எனவே, தமிழகத்தில் குறைந்த செலவில் விமானத்தை இயக்கும் பயிற்சி அளிக்க, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம், பொது - தனியார் கூட்டு முயற்சியில், விமான பயிற்சி நிலையம் அமைக்க முடிவு செய்தது.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நாலாட்டின்புதுார், தோணுகல் கிராமங்களில், 100 ஏக்கர் நிலம் தமிழக அரசின் வசம் உள்ளது.அங்கு, விமான பயிற்சி நிலையம் அமைக்க, சாதகமான வானிலை நிலவுகிறது. எனவே, விமான ஓடுபாதையுடன் பயிற்சி நிலையத்தை அமைத்து, 30 ஆண்டுகள் இயக்க, கூட்டு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய கடந்த ஆண்டு இறுதியில், 'டிட்கோ' நிறுவனம், 'டெண்டர்' கோரியது.இதில், மும்பையை சேர்ந்த ஆர்.எப்.டி., ஏவியேஷன் அகாடமி எல்.எல்.பி., நிறுவனம் தேர்வாகியுள்ளது. அந்நிறுவனத்திற்கு, விமான பயிற்சி நிலையம் அமைக்கும் ஆணையை, 'டிட்கோ' வழங்கியுள்ளது.கூட்டு நிறுவனம் ஈட்டும் வருவாயில், ஒரு மணி நேரம் விமானம் பறந்தால், 700 ரூபாய், 'டிட்கோ'வுக்கு வழங்க வேண்டும். ஒரு விமான பயிற்சி நிலையத்தில் குறைந்தது, மூன்று விமானிகள் இருக்க வேண்டும்.இது வரை, விமான நிலையங்களுக்கு அருகிலேயே விமான பயிற்சி நிலையம் உள்ளது. கோவில்பட்டியில் தான் முதல் முறையாக அரசு வழங்கும் இடத்தில், தனியார் வாயிலாக பயிற்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்