வரும் 12ம் தேதி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள்
ஈரோடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஈரோடு மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் வரும் 12ம் தேதி நடக்கிறது. வரும் 12ம் தேதி காலை ஏழு மணிக்கு, ஈரோடு மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான சைக்கிள் போட்டி நடக்கிறது. இதில் 13 வயதுக்குள், அதாவது 2000 ஆண்டு, ஜனவரி ஒன்றாம் தேதிக்கு பின் பிறந்திருக்க வேண்டும். இதில், மாணவர்கள் 15 கி.மீ.,, மாணவியர், பத்து கி.மீ., ஓட்டி செல்ல வேண்டும். அடுத்து, 15 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 1998 ஜனவரி ஒன்றுக்குப்பின் பிறந்திருக்க வேண்டும். மாணவர்கள், 20 கி.மீ., மாணவியர், 15 கி.மீ., செல்ல வேண்டும். இறுதியாக, 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 1996 ஜனவரி ஒன்றுக்குப்பின் பிறந்திருக்க வேண்டும். இதிலும், மாணவர்கள், 20 கி.மீ., மாணவியர், 15 கி.மீ., தூரம் கடக்க வேண்டும். இந்த சைக்கிள் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர், இந்தியாவின் தரமான சைக்கிள்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியரிடம், வயது சான்று பெற்று, 12ம் தேதி காலை, 6.30 மணிக்குள், ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கில், ஆஜராக வேண்டும். இப்போட்டிகளில், ஒவ்வொரு பிரிவிலும், முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல், பத்து இடங்களை பெறுபவர்களுக்கு, தகுதி சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விவரம் பெற, 0424 2223157, 9940341490 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சண்முகம் கேட்டுக்கொண்டார்.