டெட் தேர்வு எழுதும் 4.80 லட்சம் ஆசிரியர்கள்
சென்னை: தமிழகத்தில், நவ., 15, 16ம் தேதிகளில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வை எழுத, 4.80 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும், 'டெட்' என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல லட்சம் பேர், டெட் தேர்வில் இன்னும் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இந்நிலையில், வரும் 15, 16ம் தேதிகளில், டெட் தேர்வுகள் நடைபெற உள்ளன.இந்த தேர்வை எழுத, இடைநிலை ஆசிரியர்கள், 1 லட்சத்து, 7370 பேர், பட்டதாரி ஆசிரியர்கள், 3 லட்சத்து, 73,438 பேர் என, மொத்தம், 4 லட்சத்து, 80,808 பேர் விண்ணப்பித்துள்ளனர். 15ம் தேதி, இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் முதல் தாள் தேர்வும், மறுநாள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் இரண்டாம் தாள் தேர்வும் நடைபெற உள்ளது.சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், ஒரு சிலர் விண்ணப்ப அடையாள எண் மற்றும் கடவுச்சொல்லை மறந்து விட்டதால், ஹால் டிக்கெட்டுகளை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தின், https://trb.tn.gov.in என்ற இணையதளத்தில், 'ஹால் டிக்கெட் டவுன்லோடு' என்ற பகுதிக்கு சென்று, 'டெட் ஹால் டிக்கெட்' என்பதை தேர்வு செய்து, தாள் 1 அல்லது 2 என்பதை தேர்வு செய்து, ஏற்கனவே பதிவு செய்த மொபைல் போன் எண், விண்ணப்ப எண், மின்னஞ்சல் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை நிரப்ப வேண்டும். அதன்பின் பிறந்த தேதியை உள்ளீடு செய்தால், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு வாரியம் கூறியுள்ளது.