கோவையில் சின்ன கான்ட்ராக்டர்கள் பெயரில் ஒப்பந்தம் போட்டு, பல கோடி ரூபாய் தொகையுள்ள ரோடு சீரமைப்பு டெண்டர்களை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளே எடுத்து, பல கோடி ரூபாய்க்கு முறைகேடு செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலை துறையின் பெரும்பான்மையான பணிகளை, இத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவினர் தான் மேற்கொள்கின்றனர். பாதாள சாக்கடை, குடிநீர் திட்டம் மற்றும் புதை மின் வடம், மழைநீர் வடிகால் போன்ற பணிகள் நடந்த பின், ரோடுகளை மறு சீரமைப்பு செய்வதும், இந்த பிரிவிலுள்ள இன்ஜினியர்கள் தான்.சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில், பல்வேறு திட்டப்பணிகள் நடந்து கொண்டே இருப்பதால், ரோடுகள் அடிக்கடி தோண்டப்படுகின்றன. அவற்றை சீரமைப்பு செய்ய, நெடுஞ்சாலை துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில், 90 சதவீத தொகை, இந்த பிரிவால் தான் கையாளப்படுகிறது. வழக்கமாக, இவ்வாறு ரோடு சீரமைப்பு பணிகளுக்கு டெண்டர் விடும் போது, ஆளும்கட்சி மேலிடத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாகக் கொடுக்கப்படும். அதன்பின், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு அவர்களின் பொறுப்புக்கேற்ப கமிஷன் தரப்பட்டு, மீதித்தொகையில் தான் பணிகள் நடக்கும். இதில், கமிஷன் தொகை உயரும் பட்சத்தில், பணியின் தரம் குறையும். அப்பவும் இப்பவும்...கமிஷன்!
முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், நெடுஞ்சாலை பணிகளில் மேலிடத்துக்கு, 12 சதவீதம் வரை கமிஷன் தரப்பட்டு வந்தது. உள்ளூர் ஆளும் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் தரப்புக்கு தனியாக கமிஷன் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., முக்கிய பிரமுகர்களே, பினாமிகள் பெயர்களில் கான்ட்ராக்ட் நிறுவனங்களை நடத்தி, பணிகளை எடுத்து செய்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையும் நடந்து வருகிறது.ஆனால் இப்போது, துறையை கையாளும் ஆளும் கட்சி வி.ஐ.பி.,க்கு 30 சதவீதம் கமிஷன் போய் விடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதுபோக, 10 சதவீத தொகையை கான்ட்ராக்டருக்கு கொடுத்து விட்டு, அவர்கள் பெயரில் அந்தப் பணிகளை துறை இன்ஜினியர்களே எடுத்து,, மீதித் தொகையை பங்கிட்டுக் கொள்வதாக, 'பகீர்' புகார் கிளம்பியுள்ளது.மற்ற ஊர்களை விட, கோவையில் தான் இந்த அத்துமீறல் பகிரங்கமாக நடப்பது தெரிய வந்துள்ளது. கோயம்புத்துார் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் புகார் மனு, இதை ஊர்ஜிதம் செய்துள்ளது. சமீபத்தில், 11 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 87 ரோடு சீரமைப்பு பணிகளுக்கு, 2024 பிப்.,14 தேதியிட்டு, டெண்டர் (நோட்டீஸ் எண்கள்: 52, 53, 54) விடப்பட்டுள்ளது. பணிகள் செய்யாமலே பணம்!
இவை அனைத்துமே, 20 லட்சம் ரூபாய்க்கும் குறைவான மதிப்பிலான பணிகள் தான். கடந்த மே 15 அன்று, இதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்ட போது தான், கோவை கோட்ட பொறியாளர், பிப்., 14 என்று முன் தேதியிட்டு, இந்த நோட்டீஸ்களை வெளியிட்டது தெரியவந்தது. இதில் எந்தப் பணியுமே, தகுதி வாய்ந்த அதாவது, இதற்கான தளவாடங்கள் உள்ள கான்ட்ராக்டருக்கு வழங்கப்படவில்லை. ஏற்கனவே, கடந்த ஆண்டிலேயே இதே போல கோவையில் சின்னச் சின்ன கான்ட்ராக்டர்கள் பலருக்கும், பல பணிகள் வழங்கப்பட்டு, அவற்றில் பல பணிகள் நடக்காமலே பணம் எடுத்ததாக புகார் எழுந்தது. அப்போது, கான்ட்ராக்டர்கள் தரப்பில், கோட்ட் பொறியாளரிடம் பேச்சு நடத்திய போது, துறை இன்ஜினியர்களே பணி எடுத்துச் செய்ததாக, புகார் தெரிவிக்கப்பட்டது.உடன், 'இனிமேல் இன்ஜினியர்கள் வாயிலாக பணிகள் நடக்காது; வெளிப்படை தன்மையுடன் தகுதி வாய்ந்த கான்ட்ராக்டர்களுக்கு பணிகள் வழங்கி, முறைப்படி பணிகள் நடக்கும்' என்று கோட்டப் பொறியாளர் சார்பில், வாய்மொழியாக உறுதி அளிக்கப்பட்டது. இதனால், கான்ட்ராக்டர்கள் சமாதானம் அடைந்தனர். இப்போது மீண்டும் அதே பிரச்னை வெடித்துள்ளது. மேலே குறிப்பிட்ட மூன்று டெண்டர் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள, 87 பணிகளையும், தகுதியான கான்ட்ராக்டர்களுக்கு வழங்காமல், உதவி பொறியாளர் மற்றும் உதவிக் கோட்ட பொறியாளர் ஆகியோர் எடுத்துச் செய்வதாக, கோயம்புத்துார் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் புகார் தெரிவித்துள்ளது. இதற்கான டெண்டர் நோட்டீசையும் தர மறுப்பதாக, சங்கம் அதில் குற்றம்சாட்டியுள்ளது. 60 சதவீதம் அபேஸ்!
இது தொடர்பாக, துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் தலைமை பொறியாளருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், 'சட்டத்துக்கு புறம்பாக தரப்பட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்; பணிகள் செய்யப்பட்டிருந்தால், தரக்கட்டுப்பாடு இன்ஜினியர்கள் வாயிலாக ஆய்வு செய்ய வேண்டும். தகுதியான கான்ட்ராக்டர்களுக்கு பணி வழங்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், நீதிமன்றத்தை நாடுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது துறை செயலர் உத்தரவிட்டதன்படி, இதுபற்றி விசாரித்து அறிக்கை அளிக்குமாறு, கோவை கோட்ட பொறியாளருக்கு, கண்காணிப்புப் பொறியாளர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி விசாரணை நடக்கிறது.கோவையில் மட்டுமே ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் அளவுக்கு மறுசீரமைப்பு பணிகள் நடக்கின்றன. இவற்றில், 60 சதவீதத் தொகையை துறை இன்ஜினியர்களே எடுத்து, பெயரளவுக்கு 10 சதவீதத் தொகைக்கு பணிகளை செய்து விட்டு, மீதியை பங்கிட்டுக் கொள்வதாக, கான்ட்ராக்டர்கள் தரப்பில் புகார் வாசிக்கப்படுகிறது. இது குறித்து கேட்பதற்காக, கோவை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷை பல முறை தொடர்பு கொண்டபோதும், அவரிடம் பதில் பெறவே முடியவில்லை. இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை நேர்மையாக விசாரணை மேற்கொண்டால், பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கிடைக்கலாம் என்பது உறுதி.- நமது சிறப்பு நிருபர் -