உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / புலியை காப்போம்; புவியை காப்போம்!

புலியை காப்போம்; புவியை காப்போம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உலக புலிகள் தினத்தை முன்னிட்டு, பழங்குடியின மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.வால்பாறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (நேசம் டிரஸ்ட்) உண்டு உறைவிடப்பள்ளியில், உலக புலிகள் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் தலைமை வகித்து பேசும்போது, ''காடுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க புலிகளை பாதுகாக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, ஆனைமலை புலிகள் காப்பகத்தில், 16 புலிகள் உள்ளன.எஸ்டேட் பகுதியில் வசிப்பவர்கள், மாலை, 6:00 மணிக்கு மேல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வனவிலங்குகள் குறித்து தெரிந்து கொள்ள, மாணவர்கள் அதிக அளவில் நுால்களை படிக்க வேண்டும். இயற்கையையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பது நமது கடமையாகும்,'' என்றார்.நிகழ்ச்சியில், பழங்குடியின மாணவர்களுக்கு, நடனம், ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வனத்துறை சார்பில் பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு பேரணி

அட்டகட்டி பயிற்சி மையத்தில் உலக புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் ஞானபாலமுருகன், வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பேரணி சென்றனர். ஆழியாறு பூங்கா பகுதியில் புலிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணியருக்கும் வனத்துறை அதிகாரிகள் விளக்கி பேசினர்.

பொள்ளாச்சி

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்ட துணை இயக்குனர் அலுவலகத்தில் உலக புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவர்களிடம் புலிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொள்ளாச்சி வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

உடுமலை

திருப்பூர் வனக்கோட்டம் சார்பில், உலக புலிகள் தினத்தை முன்னிட்டு, உடுமலையில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நேதாஜி மைதானத்தில் நடந்த விழாவில், புலிகள் காப்பக துணை இயக்குனர் மற்றும் மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா துவக்கி வைத்தார்.கவுரவ வன உயிரின பாதுகாவலர் நந்தினி, வனச்சரக அலுவலர்கள் மணிகண்டன், புகழேந்தி, பிரபு, ஆரண்யா அறக்கட்டளை நிர்வாகி கார்த்திகேயன், ரோட்டரி, லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பங்கேற்றனர்.இதில், தமிழகத்திலுள்ள, 5 புலிகள் சரணாலயங்களில், 264 புலிகள் உள்ளன. இந்திய அளவில், 54 சரணாலயங்களில், 3,164 புலிகள் உள்ளன. வனத்தை காக்க, புலிகளை காக்க வேண்டும்.நடப்பாண்டு உலக புலிகள் தினத்தில், 'புலியை காப்போம்; புவியை காப்போம்' என்ற அடிப்படையிலும், வனம், வன விலங்குகளை காப்பாற்றுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என, தெரிவிக்கப்பட்டது.நேதாஜி மைதானத்தில் துவங்கிய ஊர்வலம், பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு வழியாக உடுமலை வனச்சரகம் வரை, விழிப்புணர்வு வாசகங்கள், கோஷங்களுடன் மாணவர்கள் பங்கேற்றனர்.ஊர்வலத்தில், புலி வேடமணிந்து மாணவர்கள், புலியாட்டம் ஆடியும், புலி உருவம் உள்ள முக கவசம் அணிந்தும், அரசு, தனியார் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.- நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்