ஸ்ரீவில்லிபுத்துார் - ராமேஸ்வரம் இடையேயான பயண நேரத்தை குறைக்கும் வகையில், 12 ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்ட சாலை பணியை, நெடுஞ்சாலைத்துறை மீண்டும் துாசு தட்டியுள்ளது.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் செல்வதற்கு, மதுரை வழியாக 260 கி.மீ., பயணிக்க வேண்டும். சிவகாசி மற்றும் மதுரையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, குறைந்தபட்சம், 4.30 மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது. சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலை விபத்துகள் மற்றும் சாலை விபத்துகளில் சிக்குபவர்களை, மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கும் காலதாமதம் ஏற்படுகிறது. தீபாவளி மற்றும் புத்தாண்டு நேரத்தில், சிவகாசிக்கு அதிகளவில் வரும் சரக்கு வாகனங்களால் நெரிசல் மூச்சு முட்டுகிறது.ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து மதுரை செல்லாமல், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, பார்த்திபனுார் வழியாக, மற்றொரு மாநில நெடுஞ்சாலை உள்ளது. ஆனால், இந்தச் சாலை 10 மீட்டர் அகலத்தில் இரு வழிச்சாலையாக மட்டுமே உள்ளது. பல இடங்களில், 7 மீட்டர் அகலத்தில் சாலை குறுகியுள்ளது.இச்சாலை வழியாக செல்லும் போது, பயண நேரம், 30 நிமிடங்கள் வரை குறைந்தாலும், இரவு நேரம் மற்றும், 'பீக் ஹவர்'களில் பயணிப்பது பாதுகாப்பற்றதாக உள்ளது. இந்த சாலையை, 12 ஆண்டுகளுக்கு முன், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய, மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்தது. இதற்காக, நிலம் எடுப்புக்கு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டதோடு சரி; பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. முடங்கி கிடந்த இச்சாலை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, மதுரை யில் நடந்த நெடுஞ் சாலைத்துறை ஆய்வு கூட்டத்தில், அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார். அதன்படி, நான்கு வழிச்சாலையாக, 30 மீட்டர் அகலத்திற்கு இச்சாலை விரிவுப்படுத்தப்பட உள்ளது. அத்துடன், 34 கி.மீ.,க்கு சிவகாசி சுற்றுவட்ட சாலை அமைப்பதற்கு, 10 கி.மீ.,க்கு நிலம் கையகப்படுத்த, அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக, 120 கோடி ரூபாய் ஒதுக்க, நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. நான்கு வழிச்சாலையுடன், சிவகாசி சுற்றுவட்ட சாலையும் இணைக்கப்பட உள்ளது. பூவநாதபுரம் விளக்கு முதல் வடமலாபுரம் சந்திப்பு வரை, இதற்கான பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன. இந்த சாலை பணிக்கு மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் இயங்கும் தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனம் வாயிலாக, திட்ட மதிப்பீடு தயாரிப்பு பணி வேகமாக நடந்து வருகிறது.
'ஒன்றரை மணி நேரம் குறையும்'
இதுகுறித்து, தமிழக சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:மதுரைக்கு செல்லாமல், ஸ்ரீவில்லி புத்துார் - ராமேஸ்வரம் இடையே பயணிப்பதற்கு, புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. அதிக வளைவுகள் இல்லாமல், இச்சாலை அமைய உள்ளதால், விபத்துக்கள் தவிர்க்கப்படுவதுடன், பயண நேரமும் ஒன்றரை மணி நேரம் வரை குறையும். துாரமும் 260ல் இருந்து 210 கி.மீ., ஆக குறையும். எரிபொருள் செலவும் கணிசமாக குறையும். கட்டண சாலையாக, இது பராமரிக்கப்படுமா என்பது பின்னர் தான் முடிவு செய்யப்படும். சாலை பணிக்கு திட்ட மதிப்பீடு தயாரிப்பை, இரண்டு மாதங்களில் முடிக்க, அமைச்சர் வேலு உத்தரவிட்டு உள்ளார். அதன் பின்னரே, திட்டச் செலவு விபரம் தெரியவரும். அடுத்தாண்டு துவக்கத்தில் சாலைப்பணி துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
கீழ்த்திருத்தங்கல், திருத்தங்கல், நாரணாபுரம், அனுப்பன்குளம், வெற்றிலையூரணி, ஆனையூர், ஈஞ்சார், வடபட்டி, நமஸ்கரித்தான் கிராமங்கள் வழியாக, 33.5 கி.மீ.,க்கு சிவகாசி சுற்றுவட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ளது போன்று, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், இந்த சாலை அமையும். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், கீழ்த்திருத்தங்கல், ஆனையூர் ஆகிய இரண்டு இடங்களில், ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. சாலை சந்திப்புகள் மேம்படுத்தப்பட்டு, பல இடங்களில் பாலங்களும் கட்டப்பட உள்ளன. ஸ்ரீவில்லிபுத்துார் - சிவகாசி, சிவகாசி - விருதுநகர், கழுகுமலை - சிவகாசி சாலைகள் இணைக்கப்பட உள்ளன. சுற்றுவட்டச் சாலை பணிக்கு 82 பேரிடம் 132 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. நில எடுப்பு பணிக்கு மட்டும் 120 கோடி ரூபாய், சாலை பணிக்கு 100 கோடி ரூபாய் வரை செலவிடப்பட உள்ளது. மூன்று கட்டமாக பணிகளை மேற்கொள்ள, நெடுஞ்சாலைத் துறையினர் தயாராகி வருகின்றனர். - நமது நிருபர் -