சென்னை: ''ம.தி.மு.க.,வில் நிலவும் குழப்பத்திற்கு, தி.மு.க., காரணமல்ல; மல்லை சத்யா தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்,” என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறினார்.அவர் அளித்த பேட்டி: ம.தி.மு.க.,வை விமர்சித்து மோசமான பதிவுகளை, சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுடன், துணை பொதுச்செயலர் மல்லை சத்யா தொடர்பு வைத்துள்ளார்; ஊக்குவித்து வருகிறார். அதனால் தான் கடைசியாக நடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில், அவர் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசினேன்.தலித் சமுதாயத்தை சேர்ந்த தத்துவ கவிஞர் குடியரசுவை, துணை பொதுச்செயலர் ஆக்கினேன். அவர் இறந்த பின், குடியரசுவின் குடும்பத்தினருக்கு பெரிய செலவு செய்து வீடுகள் கட்டிக் கொடுத்தேன். தலித் சமுதாயத்தை சேர்ந்த டாக்டர் கிருஷ்ணனை, பொள்ளாச்சி தொகுதி எம்.பி., ஆக்கினேன். வாசுதேவநல்லுார் சட்டசபை தொகுதியில், சதர்ன் திருமலைக்குமாரை நிறுத்தி, எம்.எல்.ஏ., ஆக்கினேன். தி.மு.க.,விடம் ம.தி.மு.க., பெற்று போட்டியிட்ட சட்டசபைக்கான நான்கு இடங்களில் இரண்டில், தலித் சமுதாயத்தினரை வேட்பாளராக நிறுத்தினேன். என் வீட்டில் முழுநேர ஊழியராக இருந்த தலித் சமுதாயத்தை சேர்ந்த சந்துரு, பாழடைந்த வீட்டில் வாழ்ந்து வந்தார். அவரது வீட்டை முழுமையாக இடித்து, புது வீடு கட்டி கொடுத்தேன். அவர் தன் இல்லத்திற்கு, என் பெயரை வைத்தார். என்னை விமர்சனம் செய்து, பதிவு போடுபவர்களிடம் தான், தினமும் தொலைபேசியில் மல்லை சத்யா பேசுகிறார். கடந்த இரண்டு ஆண்டு காலமாக இது நடக்கிறது. இதைத் தெரிந்த பின்தான், சத்யா குறித்து நிர்வாகக் குழுவில் வெளிப்படையாக பேசினேன். கட்சிக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டார். கட்சியிலிருந்து வெளியேறியவர்களிடம் தினமும் தொடர்பு கொள்கிறார். அவர்களை அழைத்துக் கொண்டு, கட்சியினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்கிறார். சமூக வலைதளங்களில் என்னை பற்றி பதிவு போடுவதற்கு, வார்த்தைகளையும் எடுத்து கொடுக்கிறார். இவரை விட சிங்கம், புலி என பேசிய எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன் போன்றவர்கள், கட்சியில் இருந்து வெளியேறியபோது கூட, அவர்களால் ஒரு துரும்பு கூட அசையவில்லை. ம.தி.மு.க.,வில் நடக்கிற குழப்பத்திற்கும் தி.மு.க.,வுக்கும் சம்பந்தம் இல்லை. ம.தி.மு.க.,வில் இருந்த முத்துரத்தினத்தை கட்டாயப்படுத்தி அழைத்து தான், தி.மு.க.,வில் செந்தில் பாலாஜி சேர்த்துள்ளார். முத்துரத்தினத்துடன் இரண்டு நாட்களாக சத்யா சுற்றியுள்ளார்.கட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, சத்யா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகக் குழுவினர் வலியுறுத்தினர். ஆனால், நான் அமைதியாக இருக்கிறேன்.இவ்வாறு வைகோ கூறினார்.
விஷம் கொடுத்திருக்கலாம்!
கடந்த 32 ஆண்டுகளாக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், உண்மையாக இருந்து வருகிறேன். வைகோவை இருமுறை ஆபத்தில் இருந்து மீட்டவன். என் மீது துரோகி என்ற பட்டத்தை சுமத்தி, வைகோ இப்படி ஒரு புகார் கூறியதை விட, ஒரு பாட்டில் விஷம் வாங்கி கொடுத்து, குடி என சொல்லி இருந்தால், நானும் மகிழ்ச்சியாக குடித்து விட்டு இறந்து போயிருப்பேன். என் மீது வைகோ தெரிவித்த குற்றச்சாட்டுகள் துளி அளவும் உண்மை இல்லை. இப்படி பழி சுமத்துவார் என, கனவிலும் நினைக்கவில்லை. - மல்லை சத்யா, துணை பொதுச்செயலர், ம.தி.மு.க.,
'அதன்பின் நடந்தவை விரும்பத்தகாதவை'
ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ அறிக்கை:திருநெல்வேலி மண்டல ம.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், சாத்துாரில் நடந்தது. 3,000 பேர் திரண்டு வந்ததால், மண்டபம் நிறைந்து வெளியே ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து இருந்தனர். இரவு 8:00 மணிக்கு வைகோ பேசத் துவங்கிய ஒரு மணி நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டதால், மண்டபத்திற்குள் இருந்த தொண்டர்கள் சிலர் எழுந்து வெளியே சென்றனர்.அப்போது, ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு செய்தனர். அதை பார்த்த வைகோ, 'மின்சாரம் தடைப்பட்டதும், சற்று நேரம் வெளியே சென்றபோது படம் எடுக்கிறீர்களே... வெளியே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பேச்சை கேட்கின்றனர். அவர்களை படம் எடுங்கள்' என, கூறினார்.அதை மீறி, கட்சியினர் வெளியேறுவதை தொடர்ந்து ஒளிப்பதிவு செய்ததால், அவர்களை வெளியேறுமாறு வைகோ கூறியதும், சில தொண்டர்கள் ஆத்திரமடைந்தனர். அதன்பின் நடந்தவை விரும்பத்தகாதவை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.