உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மோசடி புகாரில் ரத்து செய்யப்பட்ட 1,100 பத்திரங்கள் நிலை என்ன?

மோசடி புகாரில் ரத்து செய்யப்பட்ட 1,100 பத்திரங்கள் நிலை என்ன?

சென்னை : மோசடி புகார்கள் அடிப்படையில், மாவட்ட பதிவாளர்கள் ரத்து செய்த, 1,100 பத்திரங்களின் நிலை குறித்து, பதிவுத்துறை முடிவு செய்ய வேண்டிய நெருக்கடி எழுந்துள்ளது. தமிழகத்தில் அசல் உரிமையாளருக்கு தெரியாமல் ஆள்மாறாட்டம், போலி ஆவணங்களை பயன்படுத்தி, சொத்துக்கள் அபகரிக்கப்படுவதாக புகார்கள் அதிகரித்துள்ளன. இதில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன் விசாரணை முடிந்து, மோசடி பத்திரத்தை ரத்து செய்ய ஆணை பெற்று வர வேண்டும். இதனால், மோசடி பத்திரங்களை ரத்து செய்வதில் அபரிமிதமான தாமதம் ஏற்படுவதால், பதிவு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மோசடி புகார்களை விசாரித்து, மாவட்ட பதிவாளர்களே பத்திரத்தை ரத்து செய்ய வழி செய்யப்பட்டது. இந்த சட்டத்திருத்தம், 2022 ஆகஸ்ட், 16ல் அமலுக்கு வந்தது. இதன் அடிப்படையில், 11,000 புகார்கள் பெறப்பட்டன. இதில், மாவட்ட பதிவாளர்கள் விசாரணை அடிப்படையில், 1,100 பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேநேரத்தில், இந்தச் சட்டத்திருத்தம் வருவதற்கு முந்தைய காலத்தில் நடந்த மோசடிகளை விசாரிக்க முடியுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டத்திருத்தம் அமலாகும் தேதி குறித்த தெளிவு இல்லாததால், அதற்கு தடை விதித்தது. இதனால், மோசடி பத்திரங்கள் குறித்த புகார்கள் பெறுவதும், விசாரணை நடத்துவதும் நிறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில், ஏற்கனவே மாவட்ட பதிவாளர்கள் பிறப்பித்த உத்தரவுகள் தொடர்பான மேல் முறையீட்டை, பதிவுத்துறை ஐ.ஜி., விசாரிப்பதும் நிறுத்தப்பட்டது. அத்துடன், இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்றம், மோசடி புகார் அடிப்படையில், மாவட்ட பதிவாளர்கள் பிறப்பித்த ரத்து ஆணையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், 1,100 பத்திரங்களுக்கான ரத்து ஆணையும் நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மோசடி பத்திர ரத்து சட்டதிருத்தத்துக்கு எதிராக, உயர் நீதிமன்றம் சில வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறோம். குறிப்பிட்ட சில புகார்களில், மாவட்ட பதிவாளர்களின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், 1,100 பத்திரங்களை ரத்து செய்த உத்தரவும் நீக்கப்படுமா என்பது குறித்து சட்ட ரீதியாக ஆராய்ந்து வருகிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தான், இதில் முடிவுக்கு வர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Manickam Manickam
டிச 13, 2024 17:26

1100 பத்திரங்கள் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது உத்திரவில். இதில் எந்த தேதியிலிருந்து அமுல் என்ற கேள்விக்கே இடமில்லை.இவை அவையானால் ரத்து. பதிந்த பத்திரம், வில்லங்கச் சான்று மற்றும் வாரிசுச் சான்றுகளைச் சமர்ப்பிக்க சார்பு பதிவாளர்கள் கேட்டிருந்தால் இந்த தப்பே நடந்திருக்காது.மதுரையில் ஒரு சார்பு பதிவாளர் அரசுச் சொத்தையே இதே முறையில் விறக உதவி செய்து விற்றுவிட்டனர்.மேலும் பதிந்த பத்திரங்கள் அனைத்திலும் போர் அதாவது ஒருவருக்குப் பதிலாக என்ற கையெழுத்திலேயே பதியப் பெற்றிருக்கின்றன. பதிலாகக் கையெழுத்திட்டவருக்கும், பவர் ஆப் அட்டார்னி கொடுத்த தொழிலாளிக்கும் அவருக்கு உரிமையாளர் எனச் சொல்பவருக்கும் விற்கப்பட்ட அரசுச்சொத்துக்கும் சம்பந்தமேயில்லை. இதே ஒருவருக்கு பதிலாக என இன்னொருவர் பதிவுத்திருமணங்களில் கையெழுத்துப்போட சார்பதிவாளர் ஏற்றிருந்தால் மாப்பிள்ளை அதேபெண்ணையும், பெண்ணும் வேறொரு மாப்பிள்ளையையும் கூட்டிக்கொண்டு போகும் நிலை நாட்டுக்கே அசிங்கமேற்படும்.ஒருவருக்குப் பதில் இன்னொருத்தர் கையெழுத்தை ஏற்றுக்கொண்டல் யாருடைய நிலத்தையும் யாரும் விற்கலாம்.இந்த மோசடியில் 4 மாவட்டங்களில் சுமார் 500 ஏக்கர் நிலமும் சொத்தும் அடங்கும். விசாரணை நடக்கிறது. தமிழ்த்தாய் கேட்கட்டும்.


Manickam Manickam
டிச 14, 2024 08:07

இந்த பவர் அட்டார்னியும் 5 ஊர்களை விற்பதற்காக பதிவு செய்யப்படாத தன் கம்பெனி பெயரிடப்பெற்ற தாளில் கொடுக்கப்பட்டு அரசில் சம்பளம் பெறும் சார்பு பதிவாளரே அரசுச் சொத்தை விற்கிறார். ஒவ்வொரு பத்திரத்தின் கீழ் சார்பு பதிவாளர் கையெழுத்துப்போட வேண்டிய இடத்தில் 65 டிகிரியில் தன் கையெழுத்துக்குப் பதிலாக சாய்பு கோடு போடுகிறார் ஒவ்வொரு பக்கத்திலும்.அரை கையெழுத்துக்கு அரை வீடு முழு கையெழுத்துக்கு முழுவீடு என்று விற்கப்படுகிறது. இது குறித்த வழக்குகளும் நடக்கிறது. விற்பனையும் நடக்கிறது.சிலருக்கு சார்பு பதிவாளர் தவிர்த்து 15 நாட்கள் சிறைதண்டனை கொடுக்கப்பட்டது.இருந்தும் விற்கப்பட்டன.பத்திரம் இல்லை.வில்லங்கச் சான்று இல்லை. வாரிசுச் சான்று இல்லை. விற்பனை.ஒரே சொத்து இது. இதிலும் சுமார் 1100 பத்திரங்கள் வரலாம்.இது அனுமானம். அத்தனையும் அரசுக்குச் சொந்தமானவை.உலகப்புகழ் மிகப்பெரிய நூட்பாலைகளும் இதில் அடங்கும்.கணக்கில் உள்ளன.சட்டம் விதிமுறை பதிவேடு எதுவும் தேவையில்லை. யாரு சொத்தையும் யாரும் பதியலாம் போலும்.இந்தப் பதிவில் நானும் பாதிப்புக்கு ஆளானேன்.


Kalyanasundaram R
டிச 13, 2024 10:49

Court is correct. At the same time it should instruct registration department to approach court for rectification in case any registration official involved in fraudulent registration.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை