உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மக்களுடன் முதல்வர் முகாமுக்கு பலன் கிடைக்குமா? 30 நாளுக்குள் தீர்வு காண அதிகாரிகள் முனைப்பு

மக்களுடன் முதல்வர் முகாமுக்கு பலன் கிடைக்குமா? 30 நாளுக்குள் தீர்வு காண அதிகாரிகள் முனைப்பு

'மக்களுடன் முதல்வர்', 'முதல்வரின் முகவரி' திட்டத்தில், கோவை மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம்களில், 50 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விதிமுறைக்கு உட்பட்டு, 30 நாட்களுக்குள் மனுக்களுக்கு தீர்வு காண, அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை, கோவையில், கடந்த 18ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். 13 அரசு துறைகளை சேர்ந்த, 52 விதமான சேவைகளை பெறுவதற்கு மனுக்கள் பெறப்படுகின்றன. இத்திட்டத்துக்கு முன்னோட்டமாக, நவ., 22ம் தேதி கோவையில் இரு இடங்களில் முகாம் நடத்தி, மனுக்கள் பெறப்பட்டன. 15 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இன்று, வரை முகாம் நடத்தப்படுகிறது.போதிய ஆவணங்கள் இணைத்து விதிமுறைக்கு உட்பட்டு வழங்கும் மனுக்கள் மீது, 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டுமென கறாராக உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதனால், பெறப்படும் மனுக்களை, 'மக்களுடன் முதல்வர்' திட்டம்; 'முதல்வரின் முகவரி' திட்டம் என இரு பிரிவாக பிரித்து, இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.இலவச பட்டா, முதியோர் ஓய்வூதியத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு ஒதுக்கீடு, பட்டா மாறுதல், உட்பிரிவு மாற்றுதல், இ-சேவை சான்றிதழ் கோருதல், தொழில் கடன் கோருதல் கேட்டு ஏராளமான மனுக்கள் பெறப்படுகின்றன. மாநகராட்சி சார்பில் நடத்தும் முகாம்களில், சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு கேட்பது; தெருவிளக்கு அமைத்தல், மழை நீர் வடிகால் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் கொடுக்கப்படுகின்றன.இதுவரை நடத்திய முகாம்களில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில், 28 ஆயிரம், 'முதல்வரின் முகவரி' திட்டத்தில், 22 ஆயிரம் மனுக்கள் என, மொத்தம், 50 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.இவற்றின் மீது ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; மனுவை முடித்து வைப்பதற்காக, தற்காலிக பதில் தரக்கூடாதென, துவக்க விழாவிலேயே, முதல்வர் ஸ்டாலின் கடுமையாக எச்சரித்திருக்கிறார். அதனால், இம்மனுக்கள் மீது உரிய கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடி அரசுத்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.ஏனெனில், நடப்பாண்டு லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கிறது. மக்களை தேடிச்சென்று மனுக்கள் பெற்று, தீர்வு ஏற்படுத்தாமல் ஏமாற்றினால், அரசுக்கு எதிர்மறை விளைவு ஏற்படுத்தி விடும் என்பதால், அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையோடு செயல்படுகின்றனர்.இதுதொடர்பாக, சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் கூறுகையில், 'மக்களுடன் முதல்வர் மனுக்கள் மீது, 30 நாட்களுக்குள் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பட்டா, சிட்டா நகல், வீடு ஒதுக்கீடு உள்ளிட்ட வருவாய்த்துறை தொடர்பான சேவை கேட்டு அதிகமான மனுக்கள் கொடுக்கப்படுகின்றன' என்றனர்.

'சேவை துவங்கி விட்டது'

கலெக்டர் கிராந்திகுமார் கூறுகையில், ''மக்களிடம் பெறப்படும் மனுக்கள், சரியான துறைக்கும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் சென்றிருக்கிறதா என சரிபார்க்க அறிவுறுத்தியுள்ளோம்.பெயர் மாற்றம் செய்வது, மின் இணைப்பு வழங்குவது உள்ளிட்ட சேவைகள் வழங்கும் பணி துவங்கி விட்டது. அந்தந்த துறையின் தலைவர்களும், சென்னையில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, மின்வாரிய சேவை கேட்டு அதிகமான மனுக்கள் வந்திருக்கின்றன. மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் வாரந்தோறும் ஆய்வு செய்யப்படும்,'' என்றார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Matt P
ஜன 08, 2024 01:08

இது இன்னாயா....மக்களுடன் முதல்வர் ...மக்களுடன் மக்களுக்காகவே தொண்டு செய்வதற்காக தானே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர். இதை லோகோ போட்டு பெரிதாக எழுதி தான் விளம்பரப்படுத்த வேண்டுமா? அங்கே ஒரு அமைச்சர் சிறைச்சாலையிலேயே மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று தொண்டாற்றி கொண்டிருக்கிறார். இதையும் போடலாமே. மக்களுக்காகவே சிறையிலிருந்து தொண்டாற்றி கொண்டிருக்கிறார்.


Matt P
ஜன 06, 2024 23:24

கோவை மாவட்டத்தில் மட்டும் ஐம்பதாயிரம் மனுக்கள் . எல்ல்லா மாவட்டத்து மனுக்களையும் சேர்த்தால் ,மனுக்கள் பலகோடியாயிரும் போலிருக்கு.இதையேயெல்லாம் படிச்சு முடிச்சு நிறைவேற்றணும்னா உண்மையாகவே விடியல் என்பது மாதிரி விடிஞ்சிரும் போலிருக்கு. மக்களுக்கு தீர்க்கப்பட வேண்டிய பிரச்நய்கள் எவன் வந்தாலும் அதுவும் திராவிட மாடல் ஆளும்வரை ....தொடரும் தொடர்கதையாவே இருக்கும் போலிருக்கு. கன்னித்தீவு கதை போல.


Srinivasan Ramabhadran
ஜன 06, 2024 22:30

எந்த மனுவும், எந்த சிறப்பு முகாமில் எந்த தலைவர்/ முதல்வரிடம் கொடுத்தாலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை ( அலுவலர்/ அதிகாரிகள்) நேரில் சென்று "பார்த்த பிறகு" நமது மனு அடியிலிருந்து எடுத்து பரிசீலிக்கப்படும். இல்லை என்றால் நமது மனு எங்கு உள்ளது என்று கூட கண்டு பிடிக்க முடியாது. இந்த முகாமில் அதிகபட்சமாக பிறப்பு இறப்பு சான்றிதழ் கிடைக்கும். நான் முன்பு முதல்வரின் தனிப் பிரிவிற்கு ஒரு புகார் அனுப்பி வைத்தேன். அதில் கூறியிருந்த புகார் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அப்படியே அதை முடித்து விட்டனர்.


Sathyasekaren Sathyanarayanana
ஜன 06, 2024 23:32

உண்மை தான், எனது நண்பர் இந்த முகாமில் மனு கொடுத்து வந்தார், அடுத்த மூன்று நாட்களுக்கு போன் கால் வந்தவண்ணம் இருக்கின்றன. எதற்கு என்று உங்கள் ஆராய்ச்சிக்கே விட்டு விடுகிறேன். அந்த அளவிற்கு லஞ்சம் புரையோடிவிட்டது.


g.s,rajan
ஜன 06, 2024 17:40

No Use ....


ராஜா
ஜன 06, 2024 14:05

மக்களே மனு எல்லாம் எழுதி காகிதத்தையும், நேரத்தையும் தயவு செய்து வீணாக்க வேண்டாம். இனியொரு முறை திமுகவுக்கு ஓட்டு மட்டும் போட்டு விடாதீர்கள். மக்களுக்கு இருக்கும் குறைகள் எதுவும் அவர்கள் வீட்டுக்குள் இல்லை. வெளியில் இருக்கும் குறைகளை கூட புகார் மூலம் தான் தெரிந்து கொள்ளும் நிலையில் தான் இருகிறார்கள் என்றால் அரசும், அரசு அதிகாரிகளும் வேறு என்ன வேலை செய்துகொண்டு இருகிறார்கள்?


ஆரூர் ரங்
ஜன 06, 2024 11:08

மாற்றுத் திட்டம். 300000000000000 துடன் முதல்வர்????.


Krishna Moorthy
ஜன 06, 2024 09:47

முன்னால் வாங்கிய, திறக்கப்படாத பெட்டியில் என்ன உள்ளது என தெரிந்து கொண்டு செல்லுங்கள். இல்லையெனில் அதுவே குழி பறிக்கும்


Ramesh Sargam
ஜன 06, 2024 09:39

'மக்களுடன் முதல்வர்'.. ஆனால் ஒரு சாமானியன் கூட அவரை நெருங்கமுடியாமல் பல விலை உயர்ந்த கார்கள் புடை சூழ 'கிரிவலம்' வருகிறார் முதல்வர்.


duruvasar
ஜன 06, 2024 09:08

மீண்டும் மீண்டும் குபீர் சிரிப்பு. குறை தீர்ப்புக்கு பெட்டி வைத்தது , தனி ஐ ஏ எஸ் அதிகாரி அமைத்தது, உங்களோடு நான், நீங்களும் முதல்வர், ; நமக்கு நாமே, ஒன்றுகூடுவோம் வா இப்படி பல டடைட்டில்களில் பல வண்ணங்களில் போஸ்டர் போடும் திருவிழா. சிரித்து மகிழ மற்றுமோர் நிகழ்வு. இந்த டைட்டிலை "மக்களுடன் கருணாநிதியின் மகன் ஸ்டாலின்" என போட்டால் இது முத்தமிழ் வித்தகர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை சிறப்பு செய்வது போல் அமையும்.


Karthikeyan K Y
ஜன 06, 2024 07:31

தூத்துகுடியாக இருக்கட்டும் சென்னையாக இருக்கட்டும் முதல் அமைச்சர் என்ற முறையில் அவருக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் நேரம் இல்லை மக்களின் குறைகளை கேட்டறிய , அனால் கிரிக்கெட் மேட்ச் பார்க்க முடியும், கூட்டணி கூட்டங்களுக்கு போய் மணி கணக்கில் இருக்க முடியும்,


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ